"பாரபட்சமான தடைகள் உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும்".. அமெரிக்காவை குத்திக்காட்டிய மோடி..
உஃபா : பாரபட்சமான தடைகள் உலகப் பொருளாதாரத்தையே பாதித்து விடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நெருக்கடி தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடையை சுட்டிக்காட்டும் விதமாக நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
ரஷியாவில் உள்ள உபா நகரில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் 7-வது உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது..
பிரிக்ஸ் நாடுகள், உலகின் 44 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளன. உலகளாவிய மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. உலக வர்த்தகத்தில், பிரிக்ஸ் நாடுகளுக்கு 18 சதவீதம் பங்களிப்பு இருக்கிறது.
உலகப் பொருளாதாரம் தற்போது வலுவாக இல்லை. வளர்ந்த பொருளாதாரமான ஐரோப்பாவே நெருக்கடியில் உள்ளது, நிதிச்சந்தைகள் நிலையின்றி தத்தளிக்கின்றன.
"பிரிக்ஸ் நாடுகளிடையே வேளாண்மை, உற்பத்தி, தொழில்நுட்பம், சேவை, மனித வளங்கள் என்ற அளவில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாம் நமது திறன் வளர்ச்சியை இன்னமும் பயன்படுத்த வேண்டும்"
புதிய வளர்ச்சி வங்கி இந்த 5 நாடுகளிடையே எல்லை தாண்டிய கூட்டுறவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். உறுப்பு நாடுகள், செய்யப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளிலிருந்து பயனடையும் என்றே கருதுகிறேன். பெரிய திட்டங்களுக்கான பிரிக்ஸ் முயற்சி ஒரு வரவேற்கத்தக்க முதல் படி.
உலகத்துக்கு மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் அமைந்துள்ளது. அதை எதிர்த்து போரிட்டு ஒடுக்குவதில், பாகுபாடு பார்க்கக்கூடாது. ஐ.நா.விலும், ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும். பருவநிலை மாற்றம், வறுமை போன்ற சவால்களை எதிர்த்து போரிடுவதற்கு இது மிகவும் கண்டிப்பான தேவை ஆகும்.
70 ஆண்டுகளை நிறைவு செய்கிற நிலையில், ஐ.நா.வில் சீர்திருத்தம் செய்யாமல், 21-ம் நூற்றாண்டின் சவால்களை சந்தித்து விட முடியாது. அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்களையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைவிதிப்புகள் உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கச் செய்கிறது. எனவே பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தங்களிடையே உறவுகளை ஆழப்படுத்திக் கொள்வது அவசியம். மேலும் மற்ற வளர்ந்த பகுதிகளுடனும் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதனை, மோடி வெளிப்படையாக கூறாவிட்டாலும் உக்ரைன் நெருக்கடி காரணமாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடையை விமர்சிப்பதாக அமைந்தது.