வெடிக்கும் உலக போர்? போலந்தில் நுழைந்த ரஷ்ய டிரோன்கள்.. களத்தில் இறங்கிய நேட்டோ படை.. பதற்றம்
வார்சா: ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இப்போது மற்றொரு அண்டை நாடான போலந்தில் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதை நேட்டோ படைகளுடன் இணைந்து போலந்து படைகள் சுட்டு வீழ்த்தி வருகின்றன. இது உலகளவில் போரைக் கூட உருவாக்கும் என்பதால் உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்றுவிட்டன. ஆனாலும், இந்த மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாகவே இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார். ஆனாலும், மோதல் முடிவது போலத் தெரியவில்லை.

ரஷ்யாவில் தாக்குதல்
இதற்கிடையே இப்போது போலந்து நாட்டிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதாவது போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய டிரோன்களை நேட்டோ மற்றும் போலந்து படைகள் சுட்டு வீழ்த்தின. இதைத் தொடர்ந்து, போலந்து பாதுகாப்புப் படைகளை உச்சக்கட்ட உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
போலந்து பாதுகாப்பு அமைச்சர்
இது குறித்து போலந்தின் துணை பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், "அத்துமீறி நுழைந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தும் பணி நடைபெற்று வருவதால், அனைத்து படைகளும் உஷார் நிலையில் உள்ளன. போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி மற்றும் பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோருடன் ராணுவம் தொடர்பில் இருக்கிறது.. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
அத்துமீறி நுழைந்த ரஷ்ய டிரோன்களை நேட்டோ படைகளுடன் இணைந்து போலந்து படைகள் சுட்டு வீழ்த்தி வருகின்றன. இதன் காரணமாகப் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடரும் அத்துமீறல்
போலந்து ஆயுதப்படை கட்டளை மையமும் இந்த அத்துமீறல்களை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து போலந்து ஆயுதப்படை தனது ட்விட்டரில், "உக்ரைனில் உள்ள இலக்குகளை ரஷ்யா தாக்கியபோது, நமது வான்வெளியில் ரஷ்ய டிரோன்கள் பல முறை அத்துமீறி நுழைந்தன.. அதுபோல ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவே தெரிகிறது. டிரோன்களை அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்தும் பணி நடைபெற்று வருகிறது
ரஷ்ய டிரோன்களை குறிவைத்து போலந்து ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.. ராணுவ நடவடிக்கை முடியும் வரை பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். போட்லாஸ்கி, மசோவியக்கி மற்றும் லூபல்ஸ்கி வோய்வோட்ஷிப்கள் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து பிரதமர் விளக்கம்
இந்தச் சம்பவம் தொடர்பாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். போலந்து வான்வெளியில் ஒரே இரவில் 19 ட்ரோன் ஊடுருவியதை ராணுவம் கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார். போலந்து மற்றும் நேட்டோ படைகள் இணைந்து மூன்று அல்லது நான்கு ட்ரோன்களை சூட்டு வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
உற்றுக் கவனிக்கும் உலக நாடுகள்
ரஷ்யா இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை. தவறுதலாக டிரோன் நுழைந்தது என்றால் இது பெரிதாக வெடிக்காது. அதேநேரம் போலந்து மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலாக இது இருந்தால் நிலைமை மோசமாகும். ஏனென்றால் போலந்து நேட்டோ உறுப்பு நாடாகும். எனவே, போலந்து மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் அனைத்தும் போலந்துக்கு ஆதரவாக வரும். இது உலகப் போர் சூழலையும் ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.











Click it and Unblock the Notifications