பாகிஸ்தானில் 202 பேருக்கு போலியோ பாதிப்பு.. 15 ஆண்டுகளில் இது அதிகம்
இஸ்லாமாபாத்: கடந்த 15 ஆண்டுகளில் அதிகபட்சமாக இந்தாண்டு 202 பேர் பாகிஸ்தானில் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளில் இருந்து போலியோவை ஒழிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு போராடி வருகிறது. முன்பு, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர், போலியோ தடுப்பு மருந்து மூலம் அந்நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்தியா போலியோ இல்லாத நாடு என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
ஆனால், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் தொடர்ந்து போலியோவின் தாக்கம் இருக்கத் தான் செய்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அங்கு தடுப்பு மருந்து வழங்க தாலிபன் தீவிரவாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது தான்.
போலியோ மருந்து வழங்கும் ஊழியர்களை தொடர்ந்து அவர்கள் கொன்று வருகின்றனர். 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 60 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் போதிய அளவிற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக அங்கு போலியோ நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 202 பேரை போலியோ தாக்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை தெரிவிக்கின்றது. இது கடந்த 15 ஆண்டுகளில் அதிகம் என அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2001ம் ஆண்டு 199 பேருக்கு போலியோ நோய்த் தாக்கம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.