வரலாற்றில் முதல் முறையாக.. ஹிரோஷிமா செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா
வாஷிங்டன்: அணு குண்டு வீச்சில் நாசமான ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த மாத இறுதியில் செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஹிரோஷிமா செல்வது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகபோரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டை வீசியது. இரும்பைக் கூட உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தின் அருகிலிருந்த அத்தனையும் பஸ்பமாகின. இதில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் குண்டு வெடிப்பில் சிக்கி கொல்லப்பட்டனர்.

இதற்கு அடுத்த 3 நாட்களுக்குள் ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகியில் ஆகஸ்ட் 9, 1945 அன்று மற்றொரு குண்டு வீசப்பட்டதில்,70 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ல், 1945 அன்று ஜப்பான் சரணடைந்தது.
இதுவரை அணுகுண்டால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கண்டறிய அந்நாட்டின் அதிபர் யாரும் நேரில் சென்றது இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் மே 27-ம் தேதி ஜி-7 உச்சி மாநாட்டுக்காக ஜப்பான் செல்லவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிரோஷிமா நகரத்துக்கும் செல்லவுள்ளார். பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் அந்நகரத்துக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால், அவரது இந்த சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்ததற்காக 2009-ம் ஆண்டு ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் போது அணு ஆயுதத்துக்கு எதிராக அவர் உரையாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications