முடிவுக்கு வரும் போர்? உக்ரைன் சென்றடைந்த பிரதமர் மோடி.. அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்தார்
கீவ்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்த நிலையில், அதில் போரை அமைதியான முறையில் நிறுத்துவது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு அங்கு உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு முறை பயணமாக போலந்து நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த 45 ஆண்டுகளில் போலந்து நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்குத் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அடுத்து உக்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி: போலந்தில் இருந்து 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' ரயில் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றார். உள்ளூர் நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உக்ரைனின் கீவ் நகருக்குப் பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
உக்ரைனில் மோடி: அங்கே பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ஜெலென்ஸ்கி சற்று எமோஷ்னலாகவே பிரதமர் மோடி அவரை ஆசுவாசப்படுத்தினார். குறிப்பாக ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், அதை அமைதியான முறையில் தீர்ப்பது குறித்தும் இதற்கான முன்னெடுப்பு குறித்தும் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி பேசியதாகத் தெரிகிறது.
முன்னதாக பிரதமர் மோடி கடந்த மாதம் தான் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றிருந்தார். அங்கே அதிபர் புதினை சந்தித்து உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்துப் பேசியிருந்தார். அந்த பயணம் நடந்து சுமார் 6 வாரங்களில் இப்போது மோடி உக்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளார். இது வரலாற்றில் மிக முக்கிய பயணமாக மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி: கடந்த 2022ல் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடங்கியது முதலே சண்டையை தவிர்த்துவிட்டு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே அவர் ரஷ்யா சென்று புதினை சந்தித்திருந்தார். இருப்பினும், இந்தச் சந்திப்பிற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூட தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன.
இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி இப்போது உக்ரைனுக்கும் சென்றுள்ளார். 1991 வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் பின்னரே உக்ரைன் தனி நாடாக ஆனது. உக்ரைன் தனி நாடான பிறகு நமது நாட்டின் பிரதமர் ஒருவர் உக்ரைன் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு 2022 முதல் மோதல் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2021ம் ஆண்டு முதலே உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இது ரஷ்ய அதிபர் புதினுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் பல முறை எச்சரித்த புதின், கடைசியாக 2022 பிப்ரவரி 24ம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியது. அப்போது தொடங்கிய போர் பல மாதங்களாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications