உலகம் வியந்து பார்த்த காதல் தேவதை.. அழகு தேவதை... டயானா!
லண்டன்: இறப்பிற்கு பின்னும் தன் அழகாலும், சேவை குணத்தால் தொடர்ந்து மக்கள் மத்தியில் நற்பெயருடன் வாழும் இங்கிலாந்து இளவரசி டயானாவின் 55வது பிறந்தநாள் இன்று.
ஜூலை 1, 1961ஆம் ஆண்டு பிறந்த டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். தனது பத்தொன்பது வயதில் இங்கிலாந்து இளவரசர் சார்லசை மணந்து, உலகப் பிரபலம் அடைந்தார் டயானா. இந்தத் தம்பதிக்கு வில்லியம், ஹரி என இரண்டு மகன்கள்.
இங்கிலாந்து அரண்மனையின் மருமகளாக ஆனபோதும், தனது சேவைகளால் அடித்தட்டு மக்களின் இதயத்தில் வாழும் நாயகி ஆனார்.
முன்னுதாரணம்...
தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருமே டயானாவுக்கு சிநேகிதமானார்கள். எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை தனது நடவடிக்கைகளால் உலகுக்கு எடுத்துக்காட்டி முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
சமூக சேவகி...
கணவர் சார்லஸுக்கு கமீலாவுடன் தொடர்பு இருப்பதை அறிந்த டயானா மனதளவில் உடைந்து போனார். தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார்.
மக்களின் இளவரசி...
சார்லஸ் - டயானா சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பின்னரும் மக்களின் இளவரசியாக அவர்களின் மனதில் வாழ்ந்தார் டயானா. விவாகரத்திற்குப் பின்னர் பல ஆண்களுடன் டயானா இணைத்து பேசப்பட்டார்.
ஊடகங்களின் துரத்தல்...
டயானா வாழ்ந்த காலத்தில் எப்போதும் அவரது பெயர், ஏதாவது காரணங்களால் இங்கிலாந்து பத்திரிக்கைகளில் தவறாது இடம் பெற்று வந்தது. வாசகர்களின் ஆர்வத்தால் மேலும் டயானா குறித்த செய்திகளுக்காக ஊடகங்கள் காத்துக் கொண்டிருந்தன. இப்படியாக மீடியாக்களின் துரத்தலே டயானாவின் மரணத்திற்கு காரணமாகவும் அமைந்தது.
இந்தியா வருகை...
உலகம் முழுவதும் தேவதையாகக் கொண்டாடப்பட்ட டயானா இந்தியாவுக்கும் வந்துள்ளார். அன்னை தெரசாவையும் சந்தித்துள்ளார். தன் விலை உயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை அவர் தர்மகாரியங்களுக்கு செலவிட்டார்.
டோடியுடன் பழக்கம்...
அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும், கையுமாய் பத்திரிகைகாரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.
விபத்தில் மரணம்...
1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பாரிசில் காரில் சென்ற டயானா, டோடியை பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் துரத்தினார்கள். அப்போது அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வேகமாகச் சென்ற டயானாவின் கார் விபத்தில் சிக்கியது. இதில், டயானா, டோடி இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேதனையில் மக்கள்...
டயானா என்ற புன்னகை அரசியின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது. இளவரசி டயானாவின் இறுதி ஊர்வலத்தை, சுமார் 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர்.
வியக்க வைத்த தேவதை...
உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் டயானா. இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது.
புன்னகை அரசி...
இன்றளவும் டயானாவின் கல்லறைக்கு தினமும் குவியும் பல்லாயிரக்கணக்கான மலர்களே, மக்கள் அவர் மீது கொண்டிருந்த அளவில்லாத அன்பிற்கு சாட்சி. புன்னகை அரசியாக, காதல் தேவதையாக இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளவரசி டயானாவிற்கு இன்று 55வது பிறந்தநாள் ஆகும்.