கடும் கோபத்தில் புதின்.. புலனாய்வு அதிகாரிகளுக்கு வீட்டுச்சிறை! உக்ரைன் போர் தோல்வி? இதுதான் காரணமா
டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில், இதுவரை கிடைத்துள்ள முடிவுகள் புதினுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
உக்ரைன் போர் 3ஆவது வாரமாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் இந்தளவுக்குப் போராடுவார்கள் என ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே போர் 16ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

ரஷ்யாவுக்கு தோல்வி
சொல்லப்போனால் இந்தப் போர் என்பது இதுவரை ரஷ்யாவுக்கு தோல்விகரமாகவே இருந்துள்ளது. கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியது. இருப்பினும், பல பகுதிகளில் ரஷ்யாவால் முன்னேற முடியவில்லை. உலகில் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக இருந்த போதிலும் ரஷ்ய ராணுவத்தால் உக்ரைன் நாட்டை கைப்பற்ற முடியவில்லை. குறிப்பாக, ரஷ்ய வீரர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் புலம்பும் ஆடியோக்களையும் உக்ரைன் ராணுவம் வெளியிட்டது ரஷ்யாவுக்குத் தர்மசங்கடத்தையே ஏற்படுத்தியது.

வீட்டுச்சிறை
இப்படிப் போர் நடவடிக்கை வெற்றிகரமாக இல்லை என்பதை ரஷ்ய அதிபர் புதினால் ஏற்க முடியவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள புதின், ரஷ்ய பாதுகாப்புப் படையான FSBஇன் வெளிநாட்டுப் பிரிவின் தலைவரான செர்ஜி பெசேடா மற்றும் துணைத் தலைவர் அனடோலி பொலியுக் ஆகியோரை வீட்டுச் சிறையில் வைக்க புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக அவர்கள் தேவையான எச்சரிக்கையை வழங்கவில்லை என்று புதின் கோபமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

உளவு துறை ரிப்போர்ட்
இந்தத் தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு தறை குறித்து முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படும் ஆண்ட்ரி சோல்டடோவ் உறுதி செய்துள்ளார். உக்ரைன் ராணுவம் பெரியளவில் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் உக்ரைன் மக்களே தங்கள் தலைவர்களை அகற்ற ஆர்வமாக உள்ளனர் என்றும் படையெடுப்பிற்கு முன்னதாக உளவுத்துறை புதினிடம் ரிப்போர்ட் கொடுத்தது அவரது ஆத்திரத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

நம்பிய புதின்
மேலும் உக்ரைன் பலவீனமாக உள்ளது என்று தெரிவித்த உளவுத் துறை நவ-நாஜி படைகளிடம் சிக்கியுள்ளது என்றும் இப்போது படையெடுத்தால் எளிதாக வீழ்த்திவிடலாம் என்றும் புதினிடம் தெரிவித்துள்ளது. இதை நம்பியே புதின் முழு வீச்சில் போரை ஆரம்பித்தார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய உளவாளிகள் பலரும் ஏற்கனவே தொடர்ச்சியாக ரகசியமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இவை உறுதி செய்யப்பட்ட தகவல்கள் என்றே புதின் நம்பி போரை ஆரம்பித்துள்ளார்.

நேர்மாறான முடிவு
ஆனால், உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து துணிச்சலாக அவர்களை எதிர்த்துப் போராடி வருகின்றன. இதனால் பல பகுதிகளில் ரஷ்யாவால் முன்னேற முடியவில்லை. மேலும், உக்ரைன் மக்களும் அந்நாட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். ரஷ்ய அதிபர் புதினே இரு முறை உக்ரைன் ராணுவம் அந்நாட்டு அரசை கவிழ்த்து ஆட்சியைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது பேச்சுவார்த்தை நடத்த எளிதாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இருப்பினும், அந்நாட்டு ராணுவமும் உக்ரைன் அரசுக்கே ஆதரவாக இருந்து வருகிறது.

கோபத்தில் புதின்
இப்படி எதிர்பார்த்த எதுவுமே நடக்காமல் போனதால் அதிபர் புதின் புலனாய்வுத் துறையினர் மீது கடும் கோபத்தில் உள்ளார். ரஷ்யாவால் இந்தப் போரை முழுமையாக வெல்ல முடியாமல் போனதற்கு இந்த உளவுத் துறை அறிக்கைகளே காரணம் என்று புதின் உறுதியாக நம்புகிறார். இதன் காரணமாகவே அந்த அமைப்பின் தலைவர்களை வீட்டுக்காவலில் புதின் வைத்துள்ளார். போர் எல்லாம் முடிந்த பின்னர், அவர்கள் மீது புதின் கடும் நடவடிக்கை எடுப்பார் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications