உக்ரைன் தலைநகரை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்.. அட்டாக்கை தீவிரப்படுத்திய புதின்! பிளான் இதுதான்
கீவ்: அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து, போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை பேச இருக்கிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. கீவ் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும், பதுங்கு குழிக்குள் சென்று ஒளிந்துக்கொள்ள வேண்டும் எனவும் கீவ் மேயர் அறிவுறுத்தியுள்ளார்.
நேட்டோவில் உக்ரைனை இணைக்க கூடாது என்பதால்தான், அந்நாட்டின் மீது ரஷ்யா போரை தொடுத்திருக்கிறது. இந்நிலையில் நாளை, டிரம்புடன் சேர்ந்து அமைதி ஒப்பந்த பேச்சுவார்தையை ஜெலன்ஸ்கி மேற்கொள்ள உள்ள நிலையில், தற்போது நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

என்ன பஞ்சாயத்து?
நேட்டோ என்பது அமெரிக்கா தலைமையிலான ராணுவம். இதில், உக்ரைன் இணைய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது. ரஷ்யாவுக்கு பக்கத்து நாடுதான் உக்ரைன். அப்படி இருக்கையில், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால்.. அமெரிக்க ராணுவம் நேரடியாக ரஷ்ய எல்லைக்கு வரும். இது மிகப்பெரிய அச்சுறுத்தல். எனவே புதின் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால், நான் தலைக்கீழாகத்தான் குதிப்பேன் என, உக்ரைன் ஒற்றைக்காலில் நின்று வருகிறது. இதுதான் பஞ்சாயத்து.
தாக்குதல் ஏன்?
இப்படி இருக்கையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த மேட்டருக்கு நான் பஞ்சாயத்து செய்கிறேன் என்று வெள்ளை அங்கி அணிந்து வந்து நிற்கிறார். அதாவது போர் நிறுத்தத்திற்கு 20 அம்சங்களை முன்வைத்திருக்கிறார். இதனை கடைபிடித்தால் போர் நிற்கும் என்று கூறுகிறார். இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச, நாளை டிரம்பை, ஜெலன்ஸ்கி சந்திக்கிறார். இப்படி இருக்கையில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. அமைதி ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகள் குழப்புகின்றன என்று கூறி இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கிறது.
பயங்கர ஆயுதங்கள்
கீவ் நகரை சுற்றி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் இதுவரை 8 பேர் காயமடைந்திருக்கின்றனர். பல இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் வெடித்ததால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். தாக்குதலையடுத்து, கீவ் மக்கள் பதுங்கு குழிக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் கின்ஷால் ரக அதிவேக ஏவுகணைகள், இஸ்கந்த வகை பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், கலிப்ர் ரக ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அமைதி ஒப்பந்தம்
தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்த 20 அம்ச அமைதி ஒப்பந்தம், பல விஷயங்களில் உக்ரைனுக்கு சாதகமாக உள்ளது. அதாவது இந்த அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட காலத்தில், உக்ரைன் தனது ராணுவ எண்ணிக்கை அதிக அளவில் பராமரிக்கவும், அதேநேரம் அமெரிக்காவிடமிருந்து ராணுவ உதவிகளை வாங்கவும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
ரஷ்யாவின் எதிர்பார்ப்பு
ஆனால், ரஷ்யா இரண்டு விஷயங்களில் உறுதியாக இருக்கிறது. ஒன்று, உக்ரைன் நேட்டோவில் இணைய கூடாது. மற்றொன்று, தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்பதுதான். நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் அழுத்தத்தை ஏற்படுத்த இன்று கீவ் நகரின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியிருக்கிறது. இது ரஷ்யாவின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் டிரம்ப் இதில் எந்த மாதிரியான நிலைப்பாட்டை மேற்கொள்வார்? என்பதுதான் தற்போதைய கேள்வி.












Click it and Unblock the Notifications