தங்கச்சியை மூச்சுத் திணறடித்துக் கொன்ற பாக். மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் அண்ணன் கைது
முல்தான், பாகிஸதான்: பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய பிரபல மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் மூச்சு திணறடித்து கொடூரமாக கொலை செய்த அவரது அண்ணன் வாசிமை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று குவான்டீல் பலூச் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு வாசிம் தலைமறைவாகி விட்டார். அவரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

குவான்டிலூடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள் ஆவர். அவர்களில் வாசிம் அஜீம்தான் தங்களது மகளைக் கொலை செய்ததாக முன்னதாக குவான்டீலின் பெற்றோர் போலீஸில் கூறியிருந்தனர். முல்தான் நகரில் உள்ள தனது வீட்டில் குவான்டீல் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையால் மூச்சுச் திணறடித்து கொலை செய்ததாக வாசிம் மீது பெற்றோர் புகார் கூறியிருந்தனர். வாசிம் ஒரு செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
குவான்டீல் பலூச் தொடர்ந்து சர்ச்சைக்கிடமாக செயல்பட்டு வந்தார். கவர்ச்சிப் படங்களைப் போடுவதும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக இருந்த ஷாஹித் அப்ரிதியைத் திட்டவது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பது என தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவரது சொந்த அண்ணனே குவான்டீலை கொலை செய்துள்ளார்.
மேலும் அவரது ஆபாசம் நிறைந்த புகைப்படங்களால் உள்ளூரிலும் மத குருமார்களின் கோபத்திற்கு ஆளானார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக முன்பே கூறப்பட்டு வந்தது. ஆனால் சொந்த வீட்டில் வைத்து அவர் கொலை செய்யப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
பலூச்சின் கொலைக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன. அவருக்கு டிவிட்டரில் 40,000 பாலோயர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 7 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அவர் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் எத்தனை தடவை என்னை வீழ்த்தினாலும் நான் கவலைப்பட மாட்டேன். எழுந்து வந்து போராடுவேன். மீண்டு வரும் வரை போராடுவேன். காரணம் நான் ஒரு போராளி என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications