நோ கல்யாணம்... நோ குழந்தை... பணிப்பெண்களைக் கதற வைக்கும் கத்தார் ஏர்வேஸின் ‘கறார்’ ரூல்ஸ்
தோஹா : கத்தார் ஏர்வேஸ் தங்களது பணிப்பெண்களுக்கு திருமணமாகியிருக்கக் கூடாது, ஒரு வேளை ஆனாலும் கர்ப்பம் அடைய கூடாது என்பது உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது :-

திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது
- திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது.
- வேலையில் சேர்ந்த பின் 5 வருடங்களுக்கு "சிங்கிளாகவே" இருக்கவேண்டும்.

அனுமதி வாங்கிய பிறகே திருமணம்
- திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் நிறுவனத்தின் அனுமதியை பெற வேண்டும்.
- கர்ப்பம் அடைவது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.
- அப்படி மீறினால் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்பன போன்ற விதிமுறைகள் உள்ளன.

மாற்றிக் கொள்ளவில்லை
பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் முதற்கட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியாகி 18 மாதங்கள் ஆன பின்பும் பெண்களுக்கு எதிரான தனது விதிமுறையை கத்தார் ஏர்வேஸ் மாற்றிக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

மறு பரிசீலனைக்கு கோரிக்கை
இதன் எதிரொலியாக அந்நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பார்சிலோனா கால்பந்து சங்கத்தை சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அப்படியெல்லாம் இல்லை
எனினும் இக்குற்றச்சாட்டை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ரோசன் டிமிட்ரோவ் கூறுகையில், ‘பணிப்பெண்கள் தனியாக இருக்கவேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை, மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் பல பணிப்பெண்கள் திருமணமானவர்கள் என்றார். பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் போன்ற காரணங்களுக்காகவே கர்ப்பம் அடைந்தது குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்' என்றார்.

படித்துப் பார்த்துத்தானே சேருகிறார்கள்
ஆனால், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்பர் அல் பேகர் கூறுகையில், ‘நிறுவனத்தின் விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேலை கேட்டு வரும்போது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை வழங்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். அதன் பின்னர் எப்படி விதிமுறைகளுக்கு எதிராக புகார் அளிக்க முடியும்' என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications