கத்தார்...அடிப்படை சம்பளம் நிர்ணயம்...பணி மாற்றம்...முன் அனுமதி தேவையில்லை!!
தோஹா: கத்தார் நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இனி வேலையை மாற்றுவதற்கு முன்பு நிறுவன உரிமையாளர்களின் அனுமதியை பெற வேண்டியதில்லை. மேலும் அந்த நாட்டில் அடிப்படை மாத வருமானத்தையும் ரூ. 20,000 ஆக அந்த நாட்டின் அரசு நிர்ணயித்துள்ளது.
கத்தார் நிர்வாக வளர்ச்சி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் இதற்கான அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அந்த நாட்டின் தொழிலாளர்கள் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது.
கத்தார் நாட்டில் வரும் 2022ஆம் ஆண்டில் பிஃபா உலக கால்பந்து கோப்பை நடைபெறுகிறது. இதையடுத்து அந்த நாட்டின் மனிதவளம் மற்றும் இடம் பெயர் தொழிலாளர்கள் மீதான பார்வை அதிகரித்துள்ளது.
கத்தார் நாட்டின் சட்டத்தின்படி, அந்த நாட்டில் ஒரு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற வேண்டுமானால், உரிமையாளரின் அனுமதி பெற வேண்டும். ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். இதெல்லாம், ஊழியர்களை தங்களது நிறுவனத்தில் அடிமைகளாக வைத்திருக்கவும், சுரண்டலுக்கும் பயன்படுத்தவே என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வந்தன.
இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் இனி ஒப்பந்த காலத்திற்கு முன்பு நிறுவன உரிமையாளரின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை.
இதுகுறித்த அறிவிப்பில், ''இரண்டு ஆண்டு கால பணி ஒப்பந்தத்தில் ஒரு மாத காலம் நோட்டீஸ் கொடுத்து பணியை ராஜினாமா செய்யலாம். அல்லது இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இரண்டு மாதங்களுக்கான நோட்டீஸ் கொடுத்துவிட்டு, பணியை ராஜினாமா செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி ஒப்பந்தம் செய்து கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் குறித்த தகவலை சம்பத்தப்பட்ட அமைச்சகம் திரட்டி வருகிறது. தகவல்கள் திரட்டப்பட்டு, அரசாணை வெளியிட்ட பின்னர் ஆறு மாத காலத்தில் புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் பணி ஒப்பந்தம் செய்து கொண்டு சென்ற தொழிலாளர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்குவது, நிலுவைத் தொகையை கொடுக்க மறுப்பது போன்ற சிக்கல்களால் இந்த புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் தங்குவதற்கு என்று தனியாக 137 ரியால் மற்றும் உணவுக்கு என்று 300 ரியால் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தங்களை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரவேற்றுள்ளது.