ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.
வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.
1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார்.
அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார்.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார். அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள். நாளை அவர்கள் லண்டனுக்குத் திரும்புவார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.
ராணியை மருத்துவ கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்த நிலையில், அவரது பிள்ளைகள் அனைவரும் அபெர்தீனுக்கு அருகே உள்ள பால்மோரலுக்கு பயணம் மேற்கொண்டனர்.
ராணியின் பேரனான இளவரசர் வில்லியமும் அங்கு இருக்கிறார். அவரது சகோதரர் இளவரசர் ஹாரி அங்கு சென்று கொண்டிருக்கிறார்.
ராணி எலிசபெத் II அரச தலைவராக இருந்த காலம் போருக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கையின்போது நடந்தது. பேரரசில் இருந்து காமன்வெல்த் ஆக நாடு மாற்றம் அடைந்தது, பனிப்போரின் நிறைவுக்காலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தது மற்றும் வெளியேறிய காலம் அதில் அடங்கியது.
ராணியின் ஆளுகை, 1874இல் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1975இல் பிறந்த லிஸ் டிரஸை இந்த வாரத்தில் புதிய பிரதமராக நியமிக்கும்வரை 15 பிரதமர்களைக் கண்டது.
தமது ஆட்சிக்காலம் முழுவதும் தமது பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளை அவர் நடத்தி வந்தார்.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் அழத் தொடங்கினர். அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டது.
ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர், லண்டனில் உள்ள மேஃபேரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்தார்.
அவர் எதிர்காலத்தில் ராணியாவார் என்று யாரும் கணிக்கவில்லை. ஆனால், இருமுறை மணவிலக்கு பெற்ற அமெரிக்கரான வாலிஸ் சிம்ப்சனை மணந்துகொள்வதற்காக 1936ம் ஆண்டு டிசம்பரில் அரியணையை விட்டு விலகினார் எலிசபெத்தின் பெரியப்பா எட்டாம் எட்வர்ட் அரசர்.
இதையடுத்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆனார். இதன் மூலம் அரியணை வாரிசு ஆனார் எலிசபெத். குடும்பத்துக்குள் லிலிபெட் என்று அழைக்கப்பட்ட எலிசபெத்துக்கு அப்போது வயது 10.
மூன்றாண்டு காலத்தில் நாஜி ஜெர்மனியுடன் போரில் ஈடுபட்டது பிரிட்டன். போர்க் காலத்தில் இளவரசி எலிசபெத் மற்றும் அவரது இளைய சகோதரி இளவரசி மார்கரெட் ஆகிய இருவரையும் கனடாவுக்கு அனுப்பிவிடலாம் என்ற யோசனையை அவர்களது பெற்றோர் நிராகரித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் பெரும்பாலான நேரத்தை விண்ட்சர் கோட்டையில் கழித்தனர்.
18 வயது ஆன பிறகு, ஆக்சிலரி டெரிடோரியல் சேவையில் 5 மாதங்கள் கழித்தார் எலிசபெத். அப்போது அடிப்படையான மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் சீர் செய்நர் திறன்களைப் பெற்றார்.
"துன்பக் காலத்தில் மலரும் சக மனிதர்களிடையிலான நேயத்தையும் பரஸ்பர பெருமித உணர்வையும் தாம் அப்போது உணரத் தொடங்கியதாக" என்று பிற்காலத்தில் அவர் நினைவுகூர்ந்தார்.
போர்க் காலத்தில் தமது மூன்றாம் நிலை உறவினரான கிரீஸ் இளவரசர் பிலிப்புடன் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டிருந்தார் எலிசபெத். அவர்களுக்கிடையிலான காதல் வளர்ந்து 1947 நவம்பர் 20ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். பிலிப் எடின்பரோ கோமகன் பட்டத்தைப் பெற்றார்.
2021ம் ஆண்டு தமது 99வது வயதில் பிலிப் இறப்பதற்கு முன்பாக, தங்களது 74 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவரே தமது வலிமை என்று கூறினார் ராணி.














Click it and Unblock the Notifications