நியூயார்க்கை சுற்றி வளைத்த 20 லட்சம் எலிகள்- 2 ஆண்டுகளாக 24 ஆயிரம் புகார்களாம்!
நியூயார்க்: நியூயார்க்கில் கடந்த இரண்டாண்டுகளாக எலிப்பிரச்சினை அதிகரித்துள்ள காரணத்தினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனராம்.
நியூயார்க் நகரவாசிகள் எலிகள் தொடர்பான பிரச்சனைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருபத்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை ஒவ்வொரு ஆண்டும் அவசர உதவிப் பிரிவில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நகர நிர்வாகம் ஆண்டுக்கு மூன்று மில்லியன் டாலர்களை இந்த எலித் தொல்லையை ஒழிப்பதற்கெனவே செலவிடுகின்றது. ஒவ்வொரு மாதமும் இந்நகரவாசிகளின் புகார்களை ஏற்று எலிகளை அழிக்க ஐம்பது பேர் கொண்ட குழு புறப்பட்டு செல்கின்றது.
எனினும், எலிகளின் பெருக்கம் குறைந்தபாடில்லை. பெருகிவரும் இந்தப் புகார்கள் நியூயார்க்வாசிகளின் அன்றாடப் பிரச்சனையாக மாறி வருகின்றது. குறிப்பாக, இந்நகரின் அப்பர் வெஸ்ட் பகுதியில்தான் எலிகள் பெருகியுள்ளது என்றும் இங்கு கருத்துக்கள் நிலவுகின்றன.
கிட்டதட்ட 84 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்நகரில் 20 லட்சத்துக்கும் அதிகமான எலிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.