ஆட்டம் கண்ட ரஷ்யா பொருளாதாரம்! அசையாமல் நம்பிக்கையோடு பேசும் புதின்!!
மாஸ்கோ: கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஆகியவற்றால் ரஷ்யாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து கொண்டுள்ளது. ஆனால் ரஷ்யா அதிபர் புதினோ, பொருளாதார நிலைமை குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்று 'நம்பிக்கை'யோடு கூறி வருகிறார்.
ரஷ்யா பொருளாதாரத்தின் அடித்தளமே கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுதான்.. இதனால்தான் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் மல்லுக் கட்டவும் ரஷ்யா முஷ்டி உயர்த்தியது.
ரஷ்யாவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் மூலம் மட்டுமே 50% வருவாய் கிடைக்கிறது என்பதால் 'கெத்து' காட்டி வந்தது. ஆனால் உக்ரைன் விவகாரத்தில் மூக்கை நுழைத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.
இதனால் எண்ணெய், எரிவாயு துறை நிறுவனங்கள் பெரும் முட்டுக் கட்டையை சந்திக்க நேர்ந்தது. இருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பு இல்லாததால் ரஷ்யாவும் சமாளித்து வந்தது.
எப்போது அமெரிக்காவும் செளதியும் கைகோர்த்து கச்சா எண்ணெய் விலையை செயற்கையாக சரிய வைத்தனரோ (பெட்ரோல் விலை சரிவின் பின்னணியில் சர்வதேச அரசியல் உள்குத்து!) அன்றே ஆட்டம் காணத் தொடங்கியது ரஷ்யாவின் பொருளாதாரம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 40% சரிந்துள்ளதால் ரஷ்யாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து கொண்டிருக்கிறது.
ரஷ்யாவின் ரூபிள் மதிப்பும் 50% அளவுக்கு சரிந்து போயுள்ளது. கடந்த ஆண்டு டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 39 .. ஆனால் தற்போது டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 79 என பாதாளத்துக்கு இறங்கியது.
இப்படி ரூபிள் மதிப்பு வேகமாக சரிவதைத் தடுக்கும் வகையில் ரஷ்யாவின் வங்கிகள் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை 10.5% சதவீதத்தில் இருந்து 17% சதவீதமாக சில நாட்களுக்கு முன் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இருப்பினும் ரூபிள் மதிப்பு சரிவாகவே இருக்கிறது.
ரூபிள் மதிப்பு சரிவால் ரஷ்யாவின் பணவீக்க விகிதம் தற்போது 9% ஆகிவிட்டது. இதனாலும் மேற்கத்திய நாடுகளின் தடையாலும் உணவுப் பொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால் ரஷ்யா நிறுவனங்கள் ஊதியம் அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல நிறுவனங்கள் ஆட்குறைப்பை மும்முரமாக்கி வருகின்றன.
ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு நிறுவனமான 'கேஸ்புரோம்' 15% முதல் 25% ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் மொத்தம் 4 லட்சத்து 59 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர் என்பதை நினைவில் கொள்வோம்.
1998ஆம் ஆண்டு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது போல ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ரஷ்யர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யா அதிபர் புதினோ, ரூபிள் மதிப்பை நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொருளாதார நிலைமை குறித்து அச்சப்பட வேண்டாம் என்கிறார்.
இதனிடையே ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சீனா உதவி செய்யக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடி குறித்து சீனா ஊடகங்கள் "கவலையுடன்" செய்திகளைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.