கிரேன் விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்காமல் ஓய மாட்டோம்.. சவுதி மன்னர் உறுதி
மெக்கா: மெக்கா பெரிய மசூதியில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்காமல் ஓய மாட்டோம் என்றும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் ஹஜ் புனித யாத்திரை செப்டம்பர் 22ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் 11ம் தேதி நடந்த இந்த பயங்கர விபத்தில் 107 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து சவுதி மன்னர் சல்மான் ஆழ்ந்த வருத்தமும், இரங்கல்களும் தெரிவித்திருந்தார். மேலும் மெக்கா விரைந்த அவர் அங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பவர்களைப் பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து மன்னர் சல்மான் கூறுகையில், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிப்போம். உண்மையைக் கண்டறியும் வரை ஓய மாட்டோம். விசாரணைக்குப் பின்னர் விபத்துக்கான காரணத்தை மக்களுக்குத் தெரிவிப்போம் என்றார் அவர்.
இதற்கிடையே இந்த விபத்தின் போது இறக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டதே என்று ஹஜ் யாத்திரையாக அங்கு வந்துள்ள பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். எகிப்தைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவர் கூறுகையில், நான் இந்த விபத்தில் இறக்காமல் போய் விட்டேனே என்று வருத்தமாக இருக்கிறது. புனிதமான இடத்தில், புனிதமான நேரத்தில் இது நடந்துள்ளது. இந்த வாய்ப்பை தவற விட்டதற்காக வருந்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
விபத்து நடந்த அடுத்த நாளே யாத்ரீகர்கள் கூட்டம் வழக்கம் போல பிரார்த்தனைக்காக வந்தவண்ணம் இருந்தனர். பலர் விபத்து நடந்த இடத்தை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
ஓம் சல்மா என்ற மொராக்கோ நாட்டு பயணி கூறுகையில் எங்களது செல்போன்கள் தொடர்ந்து ஒலித்தபடி உள்ளன. உறவினர்கள் தொடர்ந்து எங்களைத் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர் என்றார்.
இந்த விபத்தில் இறந்தவர்கள் மலேசியர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், பாகிஸ்தானியர்கள், ஈரானியர்கள், இந்தியர்கள், இந்தோனேசியர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்தாலும் கூட திட்டமிட்டபடி ஹஜ் நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications