அடேங்கப்பா.. பூமிக்குள் இன்னொரு பூமியா? இதென்ன புது கணக்கு! ஷாக் தகவலை சொன்ன விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: நாம் வசிக்கும் பூமிக்கு உள்ளே, இன்னொரு பூமி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்படியெனில் உள்ளே மனிதர்கள் இருப்பார்களா? என்று கேட்க வேண்டாம். பூமி போன்ற ஒரு உருளை உள்ளே இருப்பதைத்தான் அவர்கள் இப்படி கூறியுள்ளனர்.
ஏற்கெனவே இது தொடர்பான கோட்பாடு ஒன்று இருந்து வந்திருக்கிறது. இருப்பினும், சமீபத்தில் ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் அமைந்துள்ள நிலத்தடி பரப்பை ஆய்வு செய்தபோது இந்த கருத்துக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த பகுதியில் உள்ள நிலப்பரப்பு 'எல்எல்விபி'(Large Low-Velocity Provinces) என அழைக்கப்படுகிறது. இதை சுற்றி உள்ள நிலப்பரப்பை விட இது வலுவானதாக இருப்பதே முதலில் பெரிய சந்தேகத்தை கிளப்பியது. இவை 3000 கி.மீ அளவுக்கு நீளமாக இருப்பதையும், 1000 கி.மீ அளவுக்கு தடிமனாக இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது எப்படி உருவானது? ஏன் இது மற்ற நிலப்பரைப்பை விட அடர்த்தி மிக்கதாகவும், வலுவானதாகவும் இருக்கிறது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இதற்கான விடையாக, சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் சைஸில் உள்ள 'தியா' என்கிற கோள் ஒன்று புதியதாக உருவானதாகவும், அது அப்படியே புத்தம் புதியதா பூமி மீது மோதியதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வெறுமென வாய் வழி கதையாக இருந்த இந்த சம்பவத்திற்கு, இப்போதைய ஆய்வுகள் உயிர்கொடுக்க தொடங்கியுள்ளன. அப்படியெனில் பூமிக்கு உள்ளே இன்னொரு பூமி இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால் மொத்த தியா கிரகமும் உள்ளே இருக்க வாய்ப்பு இல்லை. சந்திரன் அளவுக்கான நிலப்பரப்பு உள்ளே இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்திய ஆய்வு சமீபத்தில் தி நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. அதில் எல்எல்விபி-யில் கண்கெடுக்கப்பட்டிருக்கும் தனிமங்கள் பூமியில் இயற்கையாக தோன்றியதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தியா பூமியுடன் மோதிய காலத்தில் பூமி கூட முழுதாக உருவாகியிருக்கவில்லை. அதேபோல, இப்போது இருக்கும் நிலவு கூட தியாவின் ஒரு பாதிதான் என்று சொல்லப்படுகிறது.
சரி இருக்கிற வேலையை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக விஞ்ஞானிகள் இதை நோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று நமக்கு கேள்வி எழலாம். விஷயம் இருக்கிறது. இந்த ஆய்வுகள் பூமியின் உருவாக்கத்தை பற்றி நமக்கு நிறைய விஷயங்களை தெரியப்படுத்தும். அதேபோல, மனித குலம் உட்பட மற்ற உயிர்கள் எப்படி உருவாகின என்பதை பற்றியும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும். இதை வைத்துக்கொண்டு மனித குலத்த மேலும் மேலும் நம்மால் மேம்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications