காதலியைக் காக்க முயன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலியான கால்பந்து கேப்டன்!
ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கேப்டன் சென்ஸோ மெயிவா, கொள்ளையர்களிடமிருந்து தனது காதலியைக் காக்க முயன்றார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி மெயிவா உயிரிழந்தார்.
ஜோஹன்னஸ்பர்க்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காதலி கெல்லி குமலோ வீட்டில் மெயிவா இருந்தபோது அங்கு திடீரென கொள்ளையர்கள் வந்து விட்டனர்.
அவர்கள் மெயிவாவின் காதலிக்கு குறி வைத்தனர். இதையடுத்து தனது காதலியைக் காக்க முயன்றுள்ளார் மெயிவா.
சரமாரி துப்பாக்கி சூடு:
அப்போது கொள்ளையர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மெயிவா குண்டு பாய்ந்து காயமைந்தார். அவரது நெஞ்சில் குண்டு பாய்ந்தது.
இறந்து போன கெல்லி:
இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது காதலி கெல்லி, ஒரு நடிகையும் ஆவார். பாடகியும் ஆவார்.
கொள்ளையர்கள்:
இரண்டு கொள்ளையர்கள் சேர்ந்து இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த செல்போன், பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு பின்னர் அவர்கள் ஓடி விட்டனர் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
வீரர்கள் கண்டனம்:
இந்த சம்பவம் குறித்து தென் ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் இப்ராகிம் மெஷாபா கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.
அணியின் கேப்டன்:
ஆப்பிரிக்க தேசிய கோப்பைப் போட்டியின்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக 4 போட்டிகளில் ஆடியுள்ளார் மெயிவா.
சகஜமான வன்முறை:
தென் ஆப்பிரிக்காவில் வன்முறை என்பது சஜகமானது. துப்பாக்கியுடன் அங்கு பலரும் திரிகிறார்கள். இப்படித்தான் பிரபல பாராலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப்பை சுட்டுக் கொன்று விட்டு தற்போது சிறையில் அடைபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் 2013 ஏப்ரல் முதல் மார்ச் 2014 வரையிலான காலகட்டத்தில் 17,000 பேர் இதுபோல பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 800 பேர் அதிகமாகும்.