இந்திய சினிமாப் பாடல்களை காலர் டியூனாக வைக்க வங்கதேச கோர்ட் தடை
டாக்கா: இந்திய சினிமாப் பாடல்களை காலர் டியூனாகவோ அல்லது ரிங்டோனாகவோ செல்போன்களில் வைத்துக் கொள்ள நமது அண்டை நாடான வங்கதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை வங்ககதேச கோர்ட் ஒன்று ஜூலை 9ம் தேதி பிறப்பித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த எந்த மொழித் திரைப் பாடல்களையும் காலர் டியூன் அல்லது ரிங் டோனாக வைக்கக் கூடாது என்று இந்த உத்தரவு கூறுகிறது.
இந்த உத்தவரால் அங்குள்ள 12 கோடி செல்போன் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. டாக்கா உயர்நீதிமன்றம்தான் இந்த வினோதமான தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து டாக்கா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், இந்திய வங்க மொழிப் பாடல்கள், இந்திப் பாடல்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த எந்தத் திரைப்பட பாடல்களையும் செல்போனில் காலர் டியூனாகவோ, வெல்கம் டியூனாகவோ, ரிங்டோனாகவோ வைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
இந்தப் பாடல்கள டியூனாக வைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பின்னர் நீதிபதிகள் பரா மெகபூப், காஸி முகம்மது இஜாருல் ஹக் அகோண்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்தது.