224 பேருடன் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம் நடுவானிலேயே உடைந்து விழுந்தது - விசாரணையாளர்கள்
கெய்ரோ: எகிப்தில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம் நடுவானில் இரண்டாக உடைந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த கோகலிமாவியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 217 பயணிகள், 7 விமான ஊழியர்களுடன் எகிப்தில் உள்ள சினாய் செங்கடல் கடற்கரை நகரமான ஷரம் எல் ஷேக்கில் இருந்து ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு சனிக்கிழமை கிளம்பியது.
விமானம் கிளம்பிய 20 நிமிடத்தில் சினாயில் உள்ள நெகேல் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியாகினர். இந்நிலையில் விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை துவங்கியுள்ளது.
நடுவானில்
ரஷ்ய விமானம் நடுவானில் இரண்டாக உடைந்துள்ளது. ஒரு பாகம் எரிந்து நாசமாகியுள்ளது. மறுபாகம் பாறை மீது மோதியுள்ளது. விமான பாகங்கள் ஒரு இடத்தில் அல்லாமல் 8 சதுர மைல் தூர பரப்பில் சிதறிக் கிடந்தது என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானம்
விபத்துக்குள்ளான ஏர்பஸ் விமானம் ஏ 321 18 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது. 21 ஆயிரம் முறை பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. நல்ல நிலையில் இருந்த விமானத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் இரண்டாக உடைந்ததற்கு அதன் வடிவமைப்பில் நிச்சயம் ஏதோ பெரிய கோளாறு இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
தீவிரவாதிகள்
விமானம் உடைந்து விழுந்துள்ளதை பார்க்கையில் அது ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதன் மூலம் தாங்கள் தான் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
2001ம் ஆண்டு விபத்து
தற்போது விபத்துக்குள்ளான விமானம் முன்னதாக கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி கெய்ரோ விமான நிலையத்தில் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானத்தின் வால் பகுதி தரையில் பலமாக மோதி பலத்த சேதம் அடைந்தது. அதன் பிறகு விமானம் ரிப்பேர் செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
வால் பகுதி
தற்போது விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடத்தில் இருந்து 3 மைல் தொலைவில் தனியாக வால் பகுதி கிடந்ததாக ரஷ்ய தொலைக்காட்சி நிருபர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வால் பகுதி தனியாக உடைந்து சென்றது தெரிய வந்துள்ளது.
மாட்டோமே
ரஷ்ய விமானத்தை சினாய் மாகாணத்தில் உள்ள தீவிரவாதிகள் தாக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் லுப்தான்சா, ஏர் பிரான்ஸ், எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் சினாய் வழியாக இனி விமானங்களை இயக்கப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளது.