போர் பதற்றத்தை உருவாக்கும் தென் கொரியா: 'ஹைட்ரஜன் குண்டு' வடகொரியா கோபம்
சியோல்: தென் கொரியாவின் நடவடிக்கைகள் போர் பதற்றத்தை ஏற்படுத்துவதாக வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த புதன்கிழமை வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதாக அறிவித்தது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென் கொரியா, ஜப்பான் போன்றவற்றுக்கு மட்டுமின்றி, வடகொரியாவின் நட்பு நாடான, சீனாவுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பகை நாடான தென்கொரியா, ஸ்பீக்கர்களை வட கொரிய எல்லைகளில் பொருத்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்வது, பாப் பாடல்கள் இசைப்பது போன்ற எரிச்சலூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதேபோன்ற செயலில் தென் கொரியா இறங்கியபோது, இவ்விரு நாட்டு ராணுவத்தினர் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றிருந்தது. எனவே தற்போதும், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய ஆளும் கட்சியின் பிரச்சார குழு தலைவர் கிம் கி நாம் செய்திநிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தென் கொரியாவின் செயல்பாடு போர் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. வட கொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனையால் பொறாமையடைந்துள்ள அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும், இந்த பதற்றத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.