கொரோனா உயிரிழப்பு.. இறுதி சடங்கிற்கு அதிக பணம் வசூலிக்கும் பூசாரிகள்... அதிருப்தியில் இந்து மகா சபா
ஜோகன்னஸ்பர்க்: கொரோனாவால் உயிரிழக்கும் இந்துக்களின் இறுதிச் சடங்கிற்கு சில பூசாரிகள் அதிகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
உலகில் கொரோனா காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்நாட்டின் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவும் அங்கு பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், தொடர்ந்து பலர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகப் பணம் வசூலிப்பு
தென்னாப்பிரிக்காவில் பெரும்பாலான இந்தியர்கள் வாசிக்கும் பகுதியாக டர்பன் நகர் உள்ளது. இந்த நகரிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கிற்கு சில இந்து பூசாரிகள் அதிகப் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ரெக்காட் செய்யப்பட்ட வீடியோக்கள்
இது குறித்து தென்னாப்பிரிக்காவின் இந்து தர்மா சங்கத்தின் உறுப்பினரும் கிளேர் எஸ்டேட் தகன மையத்தின் மேலாளருமான பிரதீப் ராம்லால் கூறுகையில், "சில பூசாரிகள் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கை மேற்கொள்ள 1,200 முதல் 2000 ரண்ட்டை வசூலிக்கின்றனர். இது தவறான ஒன்று. இறுதி சடங்கை பூசாரிகள் இலவசமாகவே மேற்கொள்ள வேண்டும். அது ஒரு சேவை. ஆனால், பூசாரிகள் சிலர் இப்படி அதிகப் பணம் வசூலிப்பதை நானே பார்த்திருக்கிறேன். இதுபோன்ற பூசாரிகளிடம் நாம் ஒதுக்க வேண்டும். அதற்குப் பதிலாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை" என்றார்.
அதிகரிக்கும் வேலைப்பளு
இது குறித்து தென்னாப்பிரிக்க இந்து மகா சபா தலைவர் அஸ்வின் திரிகாம்ஜி கூறுகையில், "தென்னாப்பிரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பூசாரிகளுக்கும் வேலைப்பளு, செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திடம் நன்கொடையாகப் பணத்தை எதிர்பார்க்கலாம். அதுவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் விருப்பப்பட்டுக் கொடுத்தால் மட்டுமே அதைப் பெற வேண்டும். பூசாரிகள் குறிப்பிட்ட தொகையை வசூலிப்பது இந்து தர்மத்திற்கு எதிரானது" என்றார்.
இலவச பிபிஇ கிட்கள்
தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்து பூசாரிகளுக்கு உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கை மேற்கொள்ள ஏதுவாக இலவசமாக பிபிஇ கிட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அதிகப் பணம் வசூலிக்கும் பூசாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்னையாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அங்குள்ள இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
தென்னாப்பிரிக்காவில் கடந்த இரண்டு மாதங்களாகவே கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 13.8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏதுவாக இந்தியா 1.5 கோடி டோஸ்களை அடுத்த மாதம் அனுப்பி வைக்கவுள்ளது.