2 கோடி மக்களின் தலையெழுத்து மாறுமா?.. பரபரக்கும் இலங்கை அதிபர் தேர்தல்.. நாளை வாக்குப் பதிவு
கொழும்பு : இலங்கை அதிபர் பதவிக்கான வாக்குப் நாளை நடக்க உள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில், புதிய அதிபர் மூலம் தங்களின் வாழ்வாதாரம் மாறுமா என்ற எதிர்பார்ப்பில் சுமார் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி, அரசியல் அசாதாரண சூழல் நிலையால் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நாளை (செப்டம்பர் 21) நடைபெற உள்ளது. நாளை மறுநாளே (செப்டம்பர் 22) வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர், இலங்கையின் 10வது அதிபராக பதவியேற்பார்.

அடுத்தடுத்த நெருக்கடியால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, கடந்த 2022ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இலங்கை அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே, பொருளாதாரத்தை சீர்படுத்த முயற்சி செய்து வருகிறார். இதனிடையே, எதிர்க்கட்சிகளின் சவால் காரணமாக அதிருபருக்கான தேர்தல் நடக்க உள்ளது.
அதிபர் பதவிக்கான ரேஸில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே, தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திஸனநாயகே, தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாச ஆகிய மூன்று பேர் தான் பிரதான வேட்பாளர்களாக இருக்கிறார்கள். இதில் இலங்கையின் சுமார் 2.2 கோடி மக்களின் தலையெழுத்தை மாற்றி எழுதுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கும். மொத்தம் 13,134 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவுக்கான நேரம் முடிந்துவிடும். அதன் பிறகு நாளை மறுநாள் காலை 9.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் தான், இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.
மொத்தமுள்ள 2.2 கோடி மக்கள் தொகையில், 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். 18 வயதை கடந்த, இலங்கை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர்கள் வாக்களிக்கலாம். ராணுவம், காவல்துறை, அரசுப்பணியாளர்கள் தேர்தல் பணிகளில் இருப்பதால் நாளை அவர்கள் வாக்களிக்க முடியாது. அவர்களுக்கு ஏற்கனவே தபால் வாக்குகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டன. அதன்படி கடந்த 11, 12 தேதிகளில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாக்குச் சீட்டில், முன்னுரிமை அடிப்படையில் 3 வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். அதாவது மூன்று வேட்பாளர்களை 1, 2, 3 தரவரிசையில் வாக்களிக்கலாம். முதல் சுற்று முடிவில் 50 சதவீதம் வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று அறிவிக்கப்படுவார். ஒருவேளை முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதம் வாக்கு கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதையடுத்து நடைபெறும் இரண்டாவது சுற்றில் முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்களின் வாக்குகள் மட்டும் எண்ணப்படும். மற்ற வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள்.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குகள், முன்னுரிமை அடிப்படையில் வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்த வேட்பாளருக்கு சென்றுவிடும். இதுவரை நடந்த அனைத்து இலங்கை அதிபர் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றே அதிபராகியுள்ளார். ஆனால் இந்த முறை மும்முனை போட்டி நிலவுவதால் அதற்கான வாய்ப்பு குறையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிபரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதிபர் பதவிக்கு மொத்தம் 39 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களில் முகமது இல்யாஸ் என்ற வேட்பாளர் கடந்த மாதம் இறந்துவிட்டார். அதனால் மொத்தம் 38 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இருப்பினும் ரணில் விக்ரம சிங்கே, அனுர குமார திஸனநாயகே, சஜித் பிரேமதாச ஆகிய மூன்று பேர் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications