இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரன் உடலே இல்லை- மரண சான்றிதழும் இல்லை: இலங்கை வக்கீல் தவராசா தடாலடி
பிரபாகரன் உயிருடன் இருக்கலாம் என்கிறார் இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா.
யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கலாம் என்ற உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்ததை நிராகரித்துவிட முடியாது என்கிறார் இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம் என கூறியிருந்தார்.

பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள் வெளி வருகின்றன. இலங்கை ராணுவமும் அரசு தரப்பும் திட்டவட்டமாக பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என கூறுகின்றன. ஆனால் தமிழர் தலைவர்களோ பிரபாகரன் உயிருடன் இருக்கக் கூடும்; பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா வெளிநாட்டில் இருக்கலாம் என்கின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பிரபாகரன் உயிருடன் இருக்கலாம் என்ற நெடுமாறன் கருத்தை நிராகரிக்க முடியாது. 2009-ம் ஆண்டு மே 18-க்குப் பின்னர் லக்ஷமண் கதிர்காமர் படுகொலை வழக்கு விசாசரணை நடந்தது. அப்போது பிரபாகரனை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க மரண சான்றிதழ் எதுவும் தரப்படவில்லை.
2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி நந்தி கடலில் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. மிக உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருந்த தருணத்தில் நந்திக் கடலில் பிரபாகரனின் உடல் க்ளீன் சேவ் (முகச்சவரம்) செய்யப்பட்டதாகவே காண்பிக்கப்பட்டது. இது எப்படி சாத்தியமானதா இருக்க முடியும்? அது பிரபாகரன் உடல் இல்லை என கருதுகிறோம் என்றார் தவராசா.












Click it and Unblock the Notifications