எளிமையான குடும்பம்.. புரட்சி நாயகன்! இலங்கையின் அதிபராகும் ஏகேடி? யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர் முன்னிலை வகித்து வருகிறார். அனுரகுமார திஸாநாயக்க 4,99,048(52.25%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாச 2,10,701(22.06%), ரணில் விக்கிரமசிங்க 1,80,983(18.95%) வாக்குகள் பெற்றுள்ளனர்
அனுர குமார திஸாநாயக்க பொதுவாக ஏகேடி என்று இலங்கை அரசியலில் அழைக்கப்படுகிறார். அவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா விமுக்தி பெரமுனா (2014 முதல்) மற்றும் தேசிய மக்கள் சக்தி (2019 முதல்) ஆகியவற்றின் தற்போதைய தலைவரும் ஆவார். 2019 இல் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான இவர்.. மீண்டும் 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

திஸாநாயக்க தனது பள்ளிப் பருவத்திலிருந்தே ஜே.வி.பி. கட்சியில் ஈடுபட்டு வந்தார். 1995 இல் ஜே.வி.பி.யின் பொலிட்பீரோவில் இணைவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.
2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2004 முதல் 2005 வரை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும், 2015 முதல் 2018 வரை எதிர்க்கட்சியின் தலைமை கொறடாவாகவும் பணியாற்றினார். 2 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்ற கட்சியின் 17வது தேசிய மாநாட்டில் ஜே.வி.பி.யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னணி: திசாநாயக்க முதியன்சேலாகே அனுர குமார திசாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி மற்றும் அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மிகவும் எளிமையான குடும்பத்தில் இவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திசாநாயக்க தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றார். கல்லூரியிலிருந்து சிறப்பாக படித்த அவர் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் முதல் மாணவராக தேர்வும் ஆனார். பள்ளிப் பருவத்தில் இருந்து ஜே.வி.பி.யில் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட திஸாநாயக்க, 1987ல் ஜே.வி.பி.யில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, 1987-1989 ஜே.வி.பி கட்சி போராட்டங்களில் ஈடுபட்டார்.
1987 முதல் முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.1995 இல், அவர் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார் மற்றும் ஜேவிபியின் மத்திய செயற்குழுவில் நியமிக்கப்பட்டார். அவர் 1998 இல் ஜே.வி.பி.யின் பொலிட்பீரோவுக்கு நியமிக்கப்பட்டார்
நாடாளுமன்ற தேர்தல்: 2000 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஜேவிபியின் தேசியப் பட்டியலில் இருந்து எம்பியாக தேர்வானார். 2001 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் எம்பியாக நியமிக்கப்பட்டார். 2004 பாராளுமன்றத் தேர்தலில், ஜே.வி.பி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) ஒரு அங்கமாகப் போட்டியிட்டது. இதில் அவர்கள் 39 இடங்களை கைப்பற்றியது.
திஸாநாயக்க, குருநாகல் மாவட்டத்திலிருந்து சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். 2004 பிப்ரவரியில் ஸ்ரீ.ல.சு.க-ஜே.வி.பி கூட்டு அரசாங்கத்தில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக அதிபர் குமாரதுங்கவினால் நியமிக்கப்பட்டார்.
போராட்டம்: இலங்கையில் நடந்த மக்கள் புரட்சி போராட்டத்திற்கு இவர் முக்கியமான காரணமாக இருந்தார். இலங்கையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார். அங்கே பணத்தின் மதிப்பு சரிந்தது, 16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு போன்ற விஷயங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டார்.
இதனால் அவர் மக்கள் இடையே புரட்சி நாயகனாக பார்க்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார். தற்போது அனுரகுமார திஸாநாயக்க 4,99,048(52.25%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாச 2,10,701(22.06%), ரணில் விக்கிரமசிங்க 1,80,983(18.95%) வாக்குகள் பெற்றுள்ளனர்












Click it and Unblock the Notifications