மோடியை வாழ்த்தி சுந்தர் பிச்சை போட்ட வீடியோ... வைரல் ஆனது!
கலிபோர்னியா: அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை வித்தியாசமாக வாழ்த்தி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாதனை தமிழர் சுந்தர் பிச்சை போட்ட வீடியோ இப்போது வைரல் ஆகி விட்டது.
பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனராம். இதனால் இணையதளத்தில் சுந்தர் பிச்சையின் வீடியோ பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அயர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு ஐநா சபைக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பயணத்தின் போது, கூகுள் மற்றும் பேஸ்புக் தலைமையகங்களுக்கும் மோடி செல்ல இருக்கிறார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள மோடிக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான தமிழர் சுந்தர் பிச்சை வீடியோ மூலம் தனது வரவேற்பைத் தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
பெருமிதம்...
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் நான் மட்டுமல்ல கூகுள் நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களும் பெருமிதம் கொள்கிறோம். அமெரிக்கா வாழ் இந்திய சமூகத்தினர் அனைவரும் மோடி வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திறமைசாலி இந்தியர்கள்...
இதுவரை, அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தியா, தனது நாட்டின் திறமைசாலிகளை ஏற்றுமதி செய்துவந்துள்ளது. இந்தியர்களும் உலகம் முழுவதும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புரட்சிகளை செய்திருக்கின்றனர்.
தொழில்நுட்ப புரட்சி...
ஆனால், தற்போது இந்தியா ஒரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகிவிட்டது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பலனளிக்கும். இணையதளத்தை பயன்படுத்தும் (முதல் தலைமுறையினர்) அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமங்களில் இணையதளம் வேகமாக பரவும் வாய்ப்பு அமைந்துள்ளது.
தொடக்கப்புள்ளி...
இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் முதலீட்டாளர்கள் பயன் பெறுவார்கள். இந்த புரட்சியின் தொடக்க புள்ளி பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வைதான்.
கூகுளின் எதிர்காலத்திட்டம்...
இந்தியாவில் உள்ள 1.2 பில்லியன் மக்களை இணைப்பதே பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் நோக்கம். குறைந்த பேண்ட்வித்தில் இணைய சேவையை நிறைய பேருக்கு அளிக்க வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் எதிர்கால திட்டமாக உள்ளது.
எதிர்பார்ப்பு...
நீங்கள் (மோடி) கூகுள் தலைமையகம் வரும்போது எங்களது சேப் மையங்களை பார்வையிட்டு உங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். உங்களது வருகை எங்களுக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சுந்தர் பிச்சை பேசியுள்ளார்.
வைரல் வீடியோ...
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.