சிரியாவில் ரஷ்யாவின் தொடர் குண்டுமழை- ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்ததாக அறிவிப்பு!!
டமாஸ்கஸ்: சிரியாவில் 2வது நாளாக ரஷ்யா நேற்றும் வான்வழித் தாக்குதலை நடத்தி குண்டுமழை பொழிந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளுடன் அமெரிக்கா ஆதரவு தீவிரவாத குழுக்களையும் இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகாலமாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியில் ப்ரீ சிரியன் ஆர்மி என்ற இயக்கத்துக்கு அமெரிக்கா முழு ஆயுத உதவி அளித்து வருகிறது.
ஏற்கெனவே சிரியாவில் அல்கொய்தா ஆதரவுடன் அல்நூஸ்ரா என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சிரியாவின் பெரும்பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் கை கோர்த்துள்ளது.
இவைகள் அல்லாமல் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பு, ஆசாத்துக்கு ஆதரவாக களத்தில் இருக்கிறது. துருக்கி, ஈராக் எல்லையில் குர்து ராணுவம் அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் ஆசாத்துக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் களத்தில் குதித்து வான்வழித் தாக்குதல்களை நடத்துகின்றன. குர்து ராணுவத்துக்கு தரைவழித் தாக்குதல்களிலும் அமெரிக்கா உதவி வருகிறது.
திடீரென தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளை நாங்களும் ஒடுக்கிறோம் என்று ரஷ்யா களத்தில் குதித்துள்ளது. சிரியா அதிபர் ஆசாத்தை எதிர்க்கும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் தாக்குவோம் என்று அறிவித்தது.
சிரியாவில் ரஷ்யா நேற்று முன்தினம் அமெரிக்கா ஆதரவு தீவிரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் ரஷ்யா சிரியாவில் குண்டுமழை பொழிந்தது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனாலும் அமெரிக்கா ஆதரவு குழுக்களை இலக்கு வைத்தே ரஷ்யா தாக்குதல் நடத்துவதால், கண்மூடித்தனமாக ரஷ்யா வான்வழித்தாக்குதலை நடத்துவதாக எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளது அமெரிக்கா.
இதனிடையே ரஷ்யாவுடன் கை கோர்த்து ஈரான் தரைவழித் தாக்குதல்களை விரைவில் நடத்தக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி இருப்பதால் சிரியா பிராந்தியத்தில் பெரும் பதற்றம் சூழ்ந்துள்ளது.