ஆப்கானிஸ்தானில்.. தாலிபான்கள் அட்டகாசம் தாங்கல! சதுரங்க விளையாட்டுக்கும் தடை! காரணம் இதுதான்
காபூல்: ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சில விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து சதுரங்க விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
நேற்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மத கலாச்சாரத்திற்கு எதிராக இந்த விளையாட்டு இருப்பதாக புகார்கள் எழுந்ததால் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறும் அதிகாரிகள், மத தலைவர்கள் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் கொடுக்கும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.

இஸ்லாமிய மத சட்டத்தில் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூதாட்டத்தை சதுரங்க விளையாட்டு ஊக்குவிக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. தாலிபான் விளையாட்டு இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி இது குறித்து கூறுகையில், "இந்த விளையாட்டு இஸ்லாமிய கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை மத அதிகாரிகள் பரிசீலிக்கும் வரை தடை அமலில் இருக்கும்" என்று கூறியுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தடை உத்தரவை மறு பரிசீலனை செய்ய எந்த கால அவகாசமும் கிடையாது என்பதுதான்.
ஆப்கன் தலைநகர் காபூலில் சதுரங்க விளையாட்டு முக்கியமானதாக இருக்கிறது. இந்த விளையாட்டு மிகச்சமீபத்தில்தான் பேமஸ் ஆனது. வேலைவாய்ப்பு இல்லாதது, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சரிவு, பொழுது போக்கு மையங்கள் மற்றும் குறிப்பிட்ட சில விளையாட்டுகளையும் தடை செய்திருப்பது இளைஞர்களை சதுரங்கத்தை நோக்கி திருப்பியிருக்கிறது. இந்த விளையாட்டு வணிகமாக்கப்பட்டிருப்பதால் இந்த தடை உத்தரவு வணிக ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வணிகர் அசிசுல்லா குல்சாடா கடந்த சில ஆண்டுகளாக சதுரங்க விளையாட்டை வணிகமாக நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், "இந்த தடை உத்தரவால் எங்களது வணிகம் பாதிக்கும். கஸ்டமர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இளைஞர்களுக்கு இப்போதெல்லாம் பெரியதாக வேலை இல்லை. எனவே இங்கு வருகிறார்கள். இதனை அரசுதான் மறைமுகமாக ஊக்குவிக்கிறது. நாங்கள் இதை சூதாட்டமாக நடத்தவில்லை" என்று கூறியிருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர். அவர்கள் வந்ததிலிருந்து ஏராளமான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் விளையாட்டு துறையிலிருந்தே அப்புறப்படுத்தப்பட்டார்கள். இதற்கு சர்வதேச அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தாலிபான்கள் இதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் எம்எம்ஏ எனப்படும் கலப்பு தற்காப்புக் கலையையும் தடை செய்தனர். அதீத வன்முறையை இது கொண்டிருக்கிறது என்று இதற்கான காரணத்தை கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications