ஆப்கனில் பெரும் குழப்பம்.. தாலிபான்களிடையே வெடித்த மோதல்.. துணை பிரதமர் சுட்டுக்கொலை? பரபர தகவல்
காபூல்: துப்பாக்கிச் சூட்டில் ஆப்கன் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள தாலிபான்களின் முக்கிய தலைவரான முல்லா பரதர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை மறுத்த தாலிபான்கள், அவர் பேசும் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும், ஆப்கன் படைகள் மீது தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள் மின்னல் வேகத்தில் ஒட்டுமொத்தமாக ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
20 ஆண்டுகளுக்குப் பின்னரும் தாலிபான்கள் இந்தளவு வலிமையாக இருப்பார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் வெறும் சில வாரங்களில் ஒட்டுமொத்த ஆப்கனையும் அவர்களால் கைப்பற்ற முடிந்தது.

மோதல்
அதேபோல தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போது எங்கும் பெரியளவில் வன்முறை இல்லை. குறிப்பாகத் தலைநகர் காபூலை எந்தவொரு துப்பாக்கிச் சூடும் இல்லாமல் தாலிபான்கள் கைப்பற்றினர். அதேநேரம் ஆப்கனை கைப்பற்றும் வரை ஒற்றுமையாக இருந்த பல்வேறு தாலிபான் குழுக்களும் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கியதாகவும் தகவல் வெளியானது. இதனால் தான் தாலிபான்கள் தலைமையிலான புதிய ஆட்சி அமையத் தாமதமானதாகவும் கூறப்படுகிறது.

முல்லா பரதர்
இந்நிலையில், தாலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அந்நாட்டின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டவருமான முல்லா பரதர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட அவர், பதவி ஏற்பதற்கு முன்னரே கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்தத் தகவலைத் தாலிபான்கள் இயக்கத்தினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும், முல்லா பரதர் பேசும் ஆடியோ ஒன்றையும் தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.

மறுப்பு
தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுலைல் ஷாஹீன் இது எந்தவொரு ஆதாரமும் இல்லாத பொய்யான ஒரு குற்றச்சாட்டு என மறுத்துள்ளார். மேலும் ஆப்கனின் கந்தகாரில் நடந்த கூட்டங்களில் முல்லா பரதர் கலந்துகொள்ளும் வீடியோவையும் தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். இருப்பினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

யார் இந்த முல்லா பரதர்
பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள ஹக்கானி குழுக்களின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானியின் ஆதரவாளர்களுடன் முல்லா பரதரின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. ஹக்கானி அமைப்பு ஆப்கனில் களத்தில் இருந்து போராடி வரும் போராளிக் குழுவாகும். இவர்கள் பல்வேறு தற்கொலைப் படை தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். அதேநேரம் ஆப்கனில் அரசியல் தலைவராக அறியப்படும் முல்லா பரதர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆப்கனை விட்டுவெளியேரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தவர்களில் முக்கியமானவர் ஆவர்.

வெளியான தகவல் என்ன
தாலிபான் தலைமையில் அமையும் புதிய அரசில் முல்லா பரதர் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அவருக்குத் துணைப் பிரதமர் பதவியே அறிவிக்கப்பட்டது. அதேபோல சில காலமாகவே அவர் பொதுவெளியில் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதன் காரணமாகவே தாலிபான்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானது.

தாலிபான்களை நம்ப முடியாது
அதேநேரம் தங்கள் அமைப்புகளில் எவ்வித மோதலும் இல்லை எனத் தாலிபான்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். அதேபோல கடந்த ஆகஸ்ட் 15க்கு பின் பொதுவெளியில் தோன்றாமல் இருக்கும் முல்லா ஹைபத்துல்லா அகுந்த்ஸடா கொல்லப்பட்டதாக வெளியான தகவலையும் தாலிபான்கள் மறுத்துள்ளனர். ஆனால், தாலிபான்கள் கூறுவதை நம்மால் 100% நம்ப முடியாது. ஏனென்றால், தாலிபான்கள் அமைப்பைத் தோற்றுவித்த முல்லா உமர் கொல்லப்பட்டதையே சுமார் 2 ஆண்டுகள் கழித்து 2015இல் தான் தாலிபான்கள் பொதுவெளியில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications