ஐநா தடை பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும் தலிபான்கள்?.. அமெரிக்க ஒப்பந்தத்தின் ஒரு பகுதியா?
காபூல்: ஐநா தடை பட்டியலில் இருந்து தலிபான்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தலிபான்- அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தடையிலிருந்து தலிபான்கள் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.

இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறுகையில் ஐநா தடை பட்டியல் குழுவானது எப்போதும் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு, அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளதை ஐநா எப்போதும் கருத்தில் கொண்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐநா பொருளாதார தடை விதிக்கும் கமிட்டியை உருவாக்கியது. இந்த கமிட்டியில் ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கா, ரிபப்ளிக் டெமோகிராடிக் ஆப் தி காங்கோ, டெமாகிரேட்டிக் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆப் கொரியா, ஈரான், ஐஎஸ்ஐஎல், அல்கொய்தா, லிபியா, மாலி, சோமாலியா, சூடன், யேமன் ஆகிய நாடுகள் இந்த தடை பட்டியலில் உள்ளன.
தடை செய்யப்பட்ட இந்த நாடுகளுடன் மற்ற நாடுகள் பண பரிமாற்றமோ வணிகமோ செய்யக் கூடாது. அது போல் இந்த நாட்டில் உள்ளவர்கள் மற்ற நாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1988 ஆவது தீர்மானத்தின் தடை பட்டியலில் தலிபான்களும் இடம்பெற்றுள்ளனர். தலிபான்களின் தலைவர் அப்துல் கானி பராதர், சிராஜூதீன் ஹக்கானி உள்பட 135 தலைவர்களும் இந்த தடை பட்டியலில் உள்ளனர். அல்கொய்தா தீவிரவாதிகளின் கை ஓங்கியதால் அவர்கள் மீது 1267 ஆவது தீர்மானத்தின்படி தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தலிபான்களின் அட்டூழியத்தால் ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் வெடித்தது.
பராதர் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவருக்கு விதிக்கப்பட்ட பயண தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விலக்கானது 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த நிலையில் ஐநா தடை பட்டியலிலிருந்து தலிபான்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விடுவிப்பானது தலிபான்- அமெரிக்கா இடையே தோஹாவில் நடந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறுவது என்றும் அல் கொய்தா அமைப்புடனான தொடர்பை தலிபான்கள் துண்டிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அவர்களுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications