ஸ்டெர்லைட்: அமெரிக்காவில் விழிப்புணர்வு போராட்டம் நடத்திய தமிழர்கள்
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாஷிங்டன்: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் விழிப்புணர்வு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் எனப்படும் காப்பர் தயாரிக்கும் ஆலையின் விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரும் மாசடைந்துள்ளது. எனவே இந்த ஆலையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய ஆலை நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை அகற்ற கோரியும் குமரரெட்டியாபுரத்தில் 47 நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரமாகும் போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்திய தூதரகம்
கடந்த வாரம் லண்டனில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு கொடுக்க வந்தனர். எனினும் அவர்களது மனுவை அதிகாரிகள் வாங்காததால் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவில்
அமெரிக்காவில் உள்ள சார்லோட் பகுதியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா மற்றும் கனடா தமிழர்கள் நேற்று அமைதி பேரணி நடத்தினர். நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க நகரங்கள்
இந்த போராட்டத்தில் காப்பர் தொழிற்சாலையால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் செய்து காட்டப்பட்டன. இதுபோல் அமெரிக்காவின் பாஸ்டன், நியூ யார்க், கிளாஸ்கோ பார்க், டல்லாஸ், வாஷிங்டன் டிசி இந்திய தூதரகம், மோரிஸ்வில்லே, டோர்னடோ, கூபர்டினோ, ஆல்ஃபெரேட்டா ஆகிய நகரங்களில் உள்ள தமிழர்கள் இதுபோன்ற போராட்டங்கள் இன்று நடத்தப்பட்டன.
வீர விளையாட்டு மூலம்
இந்த போராட்டத்தின்போது தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் உள்ளிட்டவற்றையும் நடத்திக் காட்டி தங்களது போராட்டத்தை நடத்தியது அனைவரையும் கவர்ந்தது.