பாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரிக்கிறது இன அழிப்பு, தீவிரவாதம்... இம்ரான் பேச்சுக்கு இந்தியா பதிலடி!!
ஜெனீவா: மதவாதம், இன அழிப்பு, தீவிரவாதம், ரகசியமாக அணு ஆயுத தயாரிப்பு இவைதான் பாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டுள்ளன என்று ஐநாவுக்கான இந்திய முதல் செயலாளர் பிரதிநிதி மிஜிடோ வினிடோ கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட உரை ஐநா அவையில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. இம்ரான் கானின் பேச்சு முற்றிலும் விஷம் நிரம்பி இருந்ததாகக் கூறி அப்போது, ஐநா பொதுச்சபையில் இந்தியாவுக்கான இருக்கையில் அமர்ந்து இருந்த இந்தியப் பிரதிநிதி மிஜிடோ வினிடோ வெளிநடப்பு செய்தார்.

அவையில் இம்ரான் கான் பேசியது அனைத்தும் அவருக்காகவே அவரே பேசிக் கொண்டாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மிஜிடோ கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இம்ரான் கானின் பேச்சு குறித்து அவர் குறிப்பிடுகையில், ''எந்த உறுப்படியான காரியங்களையும் செய்யாத ஒருவரின் பேச்சை ஐநா அரங்கம் கேட்டுக் கொண்டு இருந்தது. எந்த சாதனையையும் அவர் நிகழ்த்திடவில்லை. உலகிற்கு எந்த ஆலோசனையையும் வழங்கியது இல்லை. இதற்கு மாறாக பொய்யான தகவல்கள், தவறான தகவல்கள், போர் குணம், தீமைகளைதான் இந்த அவையில் பரப்பியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக இன அழிப்பு செய்து, மதவாதத்தை பரப்பி, ரகசிய அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உலகிற்கு நிறைய தீவிரவாதிகளை உருவாக்கி அளித்துள்ளனர் (லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், மற்றும் ஜெயஷ் இ மொஹம்மது தலைவர் மசூத் அசார் ஆகியோரை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்).
இந்த நாடுதான் தீவிரவாதிகளுக்கு அந்த நாட்டின் பென்ஷன் நிதியில் இருந்து உதவி வருகிறது. இந்த தலைவர்தான் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின் லாடனை தியாகி என்று பேசி இருந்தார்.

தெற்கு ஆசியாவில் 39 ஆண்டுகளுக்கு முன்பு இனப் படுகொலையை அறிமுகம் செய்த நாடு பாகிஸ்தான். வெட்கம் இல்லாமல் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்கின்றனர். பாகிஸ்தானில் இன்னும் 30,000-40,000 வரையிலான தீவிரவாதிகள் உள்ளனர். இவர்கள்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திட்டமிட்டு அவர்களது நாட்டில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களை கொன்று வருகின்றனர். மதமாற்றம் செய்து வருகின்றனர்'' என்றார்.
தொடர்ந்து ஐநா அவையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. சீனாவும் இதற்கு துணை போகிறது. ஆனால், இவர்களது வாதத்திற்கு இதுவரை எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. உள்நாட்டு விஷயத்தில் யாரும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை இதை இந்தியா ஒவ்வொரு முறையும் ஆணித்தரமாக கூறி வருகிறது.
நேற்றும் ஐநா அவையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுப்பி இருந்தார். இதற்கு இந்தியா தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications