மாற்றி யோசித்த தீயணைப்பு வீரர்கள்.. குவைத் விபத்தில் இந்தியர்கள் உயிர் தப்ப காரணமான புத்திசாலித்தனம்
குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட போது வாசல் கதவு மூடியிருந்த காரணத்தால் வெளியேற முடியாமல் தவித்த இந்தியர்களின் உயிரை காப்பாற்ற, அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் மாற்றி யோசித்தனர். புத்திசாலித்தனமான அவர்களின் முயற்சியால் பலர் உயிர் தப்பியுள்ளனர்.
குவைத்தில் என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஆறு மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கேரளா, தமிழ்நாடு உள்பட பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்தனர்..

நேற்று அதிகாலையில் ஒரு வீட்டில் சமையல் செய்த போது ஏற்பட்ட திடீர் தீ விபத்து அந்த அடுக்குமாடியில் குடியிருந்தவர்களை நிலைகுலைய வைத்தது. மளமளவென பரவிய இந்த தீ, அடுத்தடுத்த வீடுகளுக்கும், மாடிகளுக்கும் மின்னல் வேகத்தில் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருக்கிறது.
அதிகாலை நேரத்தில் பலரும் தூக்கத்தில் இருந்த நிலையில், தூக்கத்திலேயே உடல் கருகினர். அதேநேரம் புகை மூட்டம் காரணமாக பலருக்கும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு தவித்துள்னர். கொழுந்து விட்டு எரிந்த தீயின் வெப்பம் மற்றும் புகையால் ஏற்பட்ட முச்சுத்திணறலால் பரிதவித்த அவர்கள், எப்படியாவது அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தார்கள்.
சிலர் மாடியில் இருந்து குதித்தார்கள். சிலர் துணியை முகத்தில் கட்டிக்கொண்டு வேகமாக கட்டிடத்தின் தரைத்தளத்தை நோக்கி ஓடியுள்ளார்கள். ஆனால் தரைத்தளங்களில் உள்ள வெளியேறும் வாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்ததால் அவர்களால் வெளியேற முடியவில்லை. இதனால் பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடியவர்கள் மூச்சுத்திணறல் அதிகரித்து மயங்கி விழுந்து இறந்தனர்.
மறுபக்கம் எப்படியாவது உயிரை காப்பாற்ற வேண்டுமே என்று பரிதவித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் , கட்டிடத்தின் வாயில் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து உடனடியாக மாற்று திட்டத்தை யோசித்தனர்.. புத்திசாலித்தனமான ஒரு முடிவினை தீயணைப்பு வீரர்கள் எடுத்தனர். அதாவது கட்டிடத்தின் தரைத்தளத்தை நோக்கி வராமல் நேராக கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு விரைந்து செல்லுமாறு புலம் பெயர் தொழிலாளர்களிடம் கூறியுள்ளார்கள்.
மொட்டை மாடியில் ஆக்சிஜன் வரும், கரும்புகையின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால் அங்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.. அதன்படியே தீ ஜூவாலையில் இருந்தும், புகை மூட்டத்தில் இருந்தும் தப்பி மொட்டை மாடிக்கு சென்ற பலர் உயிர் தப்பி உள்ளார்கள்.. பதற்றத்தில் தவறான முடிவெடுக்காமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டதால் பலரையும் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.












Click it and Unblock the Notifications