மகளை கடித்ததால் ஆத்திரம்.. நண்டை உயிருடன் விழுங்கிய தந்தை.. அப்புறம் நடந்தது தான் ட்விஸ்ட்!
பீஜிங்: மகளை நண்டு கடித்துவிட்டதால் ஆத்திரமடைந்த தந்தை அந்த நண்டை பிடித்து வாயில் போட்டு விழுங்கிவிட்டார். இதில் உயிருடன் நண்டை விழுங்கிய அந்த நபர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெற்ற பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு எப்போதும் அலாதி பிரியம் உண்டு. அதுவும் தந்தை - மகள் இடையேயான பிணைப்பு இன்னும் சற்று கூடுதலாகவே இருக்கும்.
இன்னொரு தாய் போலவே பெண் பிள்ளைகள் தந்தையை பேணுவதால் தந்தை- மகள் பந்தம் ஈடு இணையற்றது என்று சொல்லலாம்.

தந்தை மகள் பாசம்
அதேபோல், மகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் தந்தைகள் துடித்து போய் விடுவர். மகள்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் தந்தைகள் அந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று எண்ணுவர். இப்படி தந்தை - மகள் பாசம் பற்றி சொன்னால் விவரித்து கொண்டே இருக்கலாம். இந்த நிலையில், மகள் மீதான தந்தையின் அதீத பாசம் ஒருவருக்கு உடல் நல பாதிப்பில் கொண்டு போய் விட்டு இருக்கிறது.

மகளை கடித்த நண்டு
சீனாவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வருமாறு:-சீனாவின் ஜெஜியாங் பகுதியில் வசித்து வருபவர் லுா (வயது 39). லூ கடந்த 2 மாதங்களுக்கு முன் வீட்டுக்கு நண்டு வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இவரது குழந்தை தெரியாமல் நண்டை பிடித்து விளையாடியுள்ளது. இதில் நண்டு குழந்தையை கடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது. நீண்ட நேரமாக குழந்தை அழுது கொண்டிருந்ததால் தந்தை லூ ஆத்திரம் அடைந்துள்ளார்.

நண்டை உயிருடன் விழுங்கினார்
இதனால் நண்டை பிடித்து அப்படியே உயிருடன் கடித்து விழுங்கிவிட்டார். ஆனால் அப்போது அவருக்கு உடலில் ஏதும் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது அவருக்கு வயிற்றில் வலி மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. மருந்து எடுத்தக்கொண்ட பிறகும் வலி தொடர்ந்ததால் மருத்துவமனை சென்று பார்த்திருக்கிறார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஜீரண மண்டலத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

ரத்த பரிசோதனை
ஆனால் இதற்கான காரணம் என்ன என்று டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் டாக்டர்கள் லூ கடைசியாக என்ன உணவுகளை சாப்பிட்டார் என்று அவரது மனைவியிடம் கேட்டுள்ளனர். அப்போது இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எனது கணவர் நண்டை உயிருடன் விழுங்கியதை கூறினார். இதையடுத்து டாக்டர்கள் லூவிற்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அவருக்கு ரத்தத்தில் பாக்டீரியா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பரிசோதனைக்கு வரவேண்டும்
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமடைந்துவிட்டார். எனினும் அவ்வப்போது மருத்துவமனை பரிசோதனைக்கு வரவேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மகளை கடித்ததால் ஆத்திரத்தில் உயிருடன் நண்டை விழுங்கி தந்தை ஒருவர் அவதிப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications