முகம் முழுவதும் முடியுடன் வாழும் 14 வயது தாய்லாந்து சிறுமி... கின்னசில் இடம் பிடித்தார்
பாங்காக்: முகமெல்லாம் முடியைக் கொண்ட 14 வயது தாய்லாந்து சிறுமி ஒருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
சாதனைகளைப் பதிவு செய்யும் புத்தகமான கின்னசில் இடம் பிடித்து விட வேண்டும் என்பது தான் பல சாதனையாளர்களின் லட்சியம் எனக் கூறலாம். இதற்காக அவர்கள் அசாதாரண காரியங்கள் பலவற்றை மேற்கொள்வார்கள்.
ஆனால், சிலர் எந்தவித முயற்சியும் செய்யாவிட்டாலும் ஏதாவது காரணங்களால் சாதனை அவர்களது வாசல் தேடி வந்து விடும். அப்படித் தான் இந்த தாய்லாந்து சிறுமியின் பெயரும் கின்னசில் இடம் பிடித்துள்ளது.
ஹைபர்டிரிசோசிஸ்...
தாய்லாந்தில் வாழ்ந்து வரும் 14 வயது சிறுமியான சுபத்ரா சாசுபானுக்கு ஹைபர்டிரிசோசிஸ் என்ற விநோதமான நோய்த் தாக்கம் உள்ளது.
முகம் முழுவதும் முடி...
இந்நோயினால் ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டு, சுபத்ராவுக்கு தலையில் இருப்பது போன்றே முகத்திலும் முடி வளர்ந்துள்ளது. கண் மற்றும் வாய் தவிர முகம் முழுவதும் முடி படர்ந்து காணப்படுகிறது.
ஹேர்கட்...
தலைமுடியை வெட்டி விடுவது போலவே, சுபத்ராவின் தாயார் அவ்வப்போது சிறுமியின் முகத்தில் உள்ள முடியையும் வெட்டி விடுவாராம். ஆனால், குறிப்பிட்ட நாளில் மீண்டும் அதே அளவு முடி வளர்ந்து விடுகிறதாம்.
துரதிர்ஷமான சாதனை...
சுபத்ராவின் இந்த நிலையை சாதனையாக அங்கீகரித்துள்ளது கின்னஸ் நிறுவனம். ஆனால், இது துரதிர்ஷ்வசமான சாதனை என கூறுகின்றனர் சுபத்ராவிற்கு அறிமுகமானவர்கள்.
எதிர்கால லட்சியம்...
மற்றவர்களின் கண்ணோட்டத்தைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பள்ளி சென்று வரும் சுபத்ராவிற்கு வருங்காலத்தில் மருத்துவராகி மற்ற நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்பது தான் லட்சியமாம்.