அதிசயத்தை பாருங்க..மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் உறைபனியில்.. 24,000 ஆண்டு வாழ்ந்த உயிரினம் கண்டுபிடிப்பு
நோவோசிபிர்ஸ்க்: சைபீரியாவில் மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் 24,000 ஆண்டுகள் வாழ்ந்த பழமையான நுண்ணுயிர் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video
இந்த பூமி பந்தின் உச்சகட்ட குளிர் பிரதேசமாக சைபீரியா உள்ளது. அங்கு எப்போதும் கடும் குளிர் வாட்டி வருவது இயல்பான ஒன்றாகும்.
அவ்வப்போது அங்கு மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் கீழேயும் வெப்பநிலை பதிவாகும். அங்குள்ள மக்கள் இந்த கடும் குளிர் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தொடங்கி விட்டார்கள்.
மர்மம் நிறைந்த சைபீரியா
இந்த கடும் குளிரால் அங்குள்ள நதிகள் பல காலம் கடுமையாக உறைந்த நிலையிலேயே இருக்கும். இந்த குளிரை தாக்கு பிடித்து நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. இதனால் சைபீரியாவின் யாகுடியா உள்ளிட்ட சில பகுதிகள் மர்மங்கள் நிறைந்தவையாகவே இருக்கும். உறைந்து போன நதிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் அங்கு விஞ்ஞானிகள், ஆராச்சியாளர்கள் ஏதாவது ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
24,000 ஆண்டுகள் உயிர்வாழும்
இந்த நிலையில் வடகிழக்கு சைபீரியாவில் சுமார் 24,000 ஆண்டுகள் கடும் குளிரை தாங்கி உயிர்வாழும் நுண்ணுயிர் உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரஷ்யாவின் பிராந்தியமான யாகுட்டியாவில் அலசேயா நதியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணில் பிடெல்லாய்ட் ரோட்டிஃபர் என்று அழைக்கப்படும் இந்த மிக பழங்கால நுண்ணுயிர் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
உலகெங்கிலும் உள்ள நன்னீர் வாழ்விடங்களில் காணப்படும் இந்த பல்லுயிர் உயிரினமான bdelloid rotifer, கடுமையான குளிரை தாங்கி வாழக்கூடியது என்று தெரியவந்துள்ளது. அலசேயா ஆற்றில் ஒரு துளையிடும் ரிக்கைப் பயன்படுத்தி தரையில் இருந்து சுமார் 3.5 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இந்த உயிரினம் மீட்கப்பட்டுள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்துள்ளனர்.
மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
சுமார் 23,960 முதல் 24,485 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து வாழ்ந்து வரும் இந்த delloid rotifer மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பல ஆண்டுகளாக உறைந்து இருந்து மீண்டும் தன்னை உயிர்ப்பித்து இனப்பெருக்கம் செய்துள்ளது என்பதுதான் இதில் அதிசயத்தக்க விஷயமாகும். பல்லுயிர் உயிரினங்களைப் பொறுத்தவரையில், 30,000 ஆண்டுகள் பழமையான நூற்புழு புழு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதாக ஒரு அறிக்கை முன்னரே கூறியது. மேலும் கடும் பனியில் சிக்கிய சில தாவரங்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீளுருவாக்கம் செய்யப்படும் என்ற தகவலையும் அது கூறுகிறது.