"பிசா".. இதுதான் உலகிலேயே சோகமான பனிக்கரடியாம்!
சீனாவில் உள்ள மால் ஒன்றில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கண்ணாடிக் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிசா என்ற பனிக்கரடி தான், உலகிலேயே சோகமான பனிக்கரடி என்ற பெயரைப் பெற்றுள்ளது.
பெய்ஜிங்: உலகிலேயே சோகமான பனிக்கரடி என்ற பெயரை சீனாவைச் சேர்ந்த பிசா என்ற பனிக்கரடி பெற்றுள்ளது.
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ளது குவாங் ஜோ நகர். இங்குள்ள மால் ஒன்றில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பனிக்கரடி ஒன்றை கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்து வைத்துள்ளனர்.
பிசா எனப் பெயரிடப்பட்டுள்ள பனிக்கரடி எப்போதும் சோகமாகவே காணப்படுகிறது. பார்வையாளர்கள் என்ன ஆரவாரம் செய்தாலும், அதனை கண்டு கொள்ளாது சோகமாகவே இருக்கும் பிசா.
இந்தத் தகவல் மெல்ல மெல்ல சீன விலங்குகள் நல ஆர்வலர்கள் காதுக்கும் சென்றது. பிசாவை நேரில் கண்ட அவர்கள், அது தொடர்பான வீடியோ ஒன்றை எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.
அந்த வீடியோவைப் பார்த்த மக்கள், பிசா கரடியை விடுவிக்க வேண்டும், கூண்டில் அடைத்து வைக்கக்கூடாது என கண்டனக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே பிசா கரடியின் நடவடிக்கையை ஆராய்ந்த உயிரின ஆராய்ச்சியாளர்கள், 'இது கவலையின் அறிகுறி தான்' எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட பிசா கரடியை நிச்சயமாக கூண்டில் இருந்து விடுவிக்க முடியாது என மால் நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.