ஈரானுக்கு அணு ஆயுதமா? அப்போ எங்களுக்கும் வேறு வழி கிடையாது.. சவுதி இளவரசர் சொன்ன பகீர் தகவல்
ரியாத்: ஈரான் அணு ஆயுதம் பெற்றால், சவுதியும் வேறு வழியின்றி அணு ஆயுதத்தை பெறும் என்று அதன் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.
தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த சல்மான், இஸ்ரேல்-சவுதி உறவு குறித்து நேர்மறையாக கூறியுள்ளார். கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானதிலிருந்து அதை சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை. இதற்கு காரணமாக பாலஸ்தீனம் உடனான மோதல் போக்கை சவுதி சுட்டிக்காட்டி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுடன் சவுதியை இணக்கமாக போக வைக்க அமெரிக்கா சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போதுவரை சவுதியிடம் அணு சக்தி தொழில்நுட்பம் கிடையாது.

இதை அமெரிக்கா தருவதாக கூறியிருக்கிறது. ஆனால் இதற்காக சவுதி, இஸ்ரேலுடன் இணக்கமாக போக வேண்டும். இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், இஸ்ரேலுடனான உறவில் நெருங்கி வருவதாக கூறியுள்ளார். ஆனால் பாலஸ்தீன விவகாரத்தில் பஞ்சாயத்துகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இஸ்ரேல் தனது சொந்த அணுசக்தி திட்டத்தை உருவாக்க சவுதி உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயும் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை சவுதி-இஸ்ரேல் உறவை நேர்மறையான கட்டத்திற்கு கொண்டு செல்லும், மத்திய கிழக்கில் இஸ்ரேலை சிறந்த வீரராக உருவாக்கும் இந்த நேரத்தில் பாலஸ்தீன மக்களுக்கும் விடிவு காலம் உருவாகும் என்றும் சல்மான் கூறியுள்ளார்.
ஈரானை பொறுத்த அளவில் அணு ஆயதங்களை தாங்கள் உற்பத்தி செய்கிறோம் அல்லது வாங்குகிறோம் என்கிற விமர்சனங்களை தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் யுரேனியம் செறிவூட்டலில் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்புகளை ஈரான் மீறியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்படி இருக்கையில் ஈரான் விரைவில் அணு ஆயுதங்களை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி நடந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரிக்கும்.
எனவே இதனை சமாளிக்க தற்போது சவுதி அரேபியா தயாராக இருக்கிறது என்பதை இளவரசர் முகமது பின் சல்மானின் பேட்டி உறுதி செய்திருக்கிறது. அதாவது, ஈரான் அணு ஆயுதம் பெற்றால், சவுதியும் வேறு வழியின்றி அணு ஆயுதத்தை பெறும் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சவுதிக்கும் இடையே நல்லுறவு இருப்பதால் அமெரிக்காவே சவுதிக்கு அணு ஆயுதங்களை வழங்க முன்வரலாம் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், சவுதிக்கு அணு மின் நிலையம் அமைத்து கொடுப்பதாக அமெரிக்கா நீண்ட காலமாக ஆசை காட்டி வருகிறது.
ஆனால் இதற்காக பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகிறது. இப்படி இருக்கையில், சீனா சவுதிக்கு அணு மின் நிலையத்தை கட்டி கொடுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி நடந்தால் அமெரிக்காவின் பிடியிலிருந்து சவுதி மெல்ல விலகும். இது அமெரிக்காவுக்குதான் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே அணு ஆயுத விவகாரத்தை அமெரிக்க மிகவும் எச்சரிக்கையாக அணுகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications