துபாயில் பழைய துணிகளை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் நிறுவனம்
துபாய்: துபாயில் உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்றும் ஈடுபட்டுள்ளது.
துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது.

இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் டேலண்ட் சோன் இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சன்யோ தப்னே பல்லிகர் கூறியதாவது :
அமீரகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உபயோகித்த துணிகள் அதிகமாக தேங்கி வருகிறது. ஒவ்வொருவரின் வீடுகளிலும் இது இருந்து வருகிறது. எனினும் சிலருக்கு இதனை எங்கு கொடுப்பது என தெரிவதில்லை. இதனால் கடந்த ரமலான் மாதத்தில் உபயோகித்த துணிகளை சேகரிக்கும் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த பணியில் தங்களது கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் இணைந்து பழைய துணிகளை சேகரிக்க உதவினர்.

இந்த துணிகள் அனைத்தும் நன்றாக துவைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாதாரண முறையில் தொடங்கப்பட்ட பணியானது தற்போது உலக சாதனையாக உருவெடுத்துள்ளது. இந்த துணிகள் சேகரிப்பின் மூலம் 295,122 துணிகள் சேகரிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவாக இது அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட துணிகளை விட அதிகமாகிவிட்டதால் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்க தேர்வு செய்யப்பட்டது.
இந்த பணியில் எங்களது நிறுவனமும் ஈடுபட்டதால் எங்களுக்கு அதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த பணியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. வரும் ஆண்டிலும் மிகவும் பெரிய அளவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications