பாத்ரூம் செல்வதாக தப்பி ஓடிய குற்றவாளி: 850 வாகனங்களில் தேடிய 4000 ஜப்பான் போலீசார்
டோக்கியோ: ஜப்பானில், பாத்ரூம் சென்று வருவதாகக் கூறி, தப்பிச் சென்ற பாலியல் பலாத்காரக் குற்றவாளியை தேடிப் பிடிக்க சுமார் நாலாயிரம் போலீசார், 850 வாகனங்களைப் பயன் படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜனவரி 2ம் தேதி பெண் ஒருவர் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடமிருந்த பொருட்களைக் கொள்ளையிட்ட குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சுகிமோடோ என்ற வாலிபர் கைது செய்யப் பட்டுள்ளார். நீதிபதி முன் ஆஜர் படுத்த போலீசார் அவனை அழைத்துச் சென்ற போது, பாத்ரூம் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளான் சுகிமோடோ.
ஜப்பான் போலீசாரும் நம்ம ஊரு சினிமா போலீஸ் மாதிரி நம்பி அவனை பாத்ரூம் செல்ல அனுமதிக்க, தப்பியோடி விட்டான் சுகிமோடோ.
அவன் ஓடிய செய்தி அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவனை பிடிக்க 4000 போலீசார் மற்றும் 850 வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், படகுகள், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனபோதும், இன்னும் குற்றவாளி கைது செய்யப் படவில்லை என்றும், தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.