அமெரிக்காவை உலுக்கிய '50501'.. இப்படி ஒரு தலைவலியை டிரம்ப் எதிர்பார்த்திருக்க மாட்டார்!
நியூயார்க்: அமெரிக்காவில் டிரம்பின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும், நாடு கடத்தும் உத்தரவுக்கும் எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
50501 என்கிற பெயரில் நடைபெற்ற இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் சொந்த நாட்டு மக்களால் கடுமையாக எதிர்க்கப்படுவது பேசு பொருளாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். மொத்தம் 50 போராட்டங்கள் 1 நோக்கத்திற்காக நடத்தப்பட்டிருக்கிறது. எனவேதான் இந்த போராட்டத்திற்கு 50501 என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்போராட்டங்கள் அமெரிக்க புரட்சிப் போரின் 250வது ஆண்டு நினைவாக நடத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
டிரம்ப்பின் நாடு கடத்தும் உத்தரவு, எலான் மஸ்க் தலைமையில் அமைக்கப்பட்ட திறனாய்வு துறை ஆகியவற்றுக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக பலரும் தவறுதலாக எல்சல்வடாருக்கு நாடு கடத்தப்பட்டிருப்பதாக கூறும் போராட்டக்காரர்கள், கடைசியாக இதுபோன்று கில்மார் ஆப்ரேகோ கார்சியா என்பவர் நாடு கடத்தப்பட்டிருப்பதாகவும், அவரை அமெரிக்க அரசு நினைத்திருந்தால் திரும்ப அழைத்து வந்திருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வாஷிங்டன் வெள்ளை மாளிகை, டெஸ்லா விற்பனை மையங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அதேபோல DOGE எனப்படும் திறனாய்வு துறையின் செயல்பாடுகளுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அமெரிக்காவில் சுமார் 200க்கும் அதிகமான அரசு துறைகள் இருக்கின்றன. நாசா என்பது ஒரு துறை, சிஐஏ என்பது மற்றொரு துறை. இப்படியான அரசு துறைகளுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக கொத்து கொத்தாக பணியாளர்களை வேலை விட்டு அனுப்பும் வேலையை எலான் மஸ்க் செய்து முடித்திருக்கிறார். மட்டுமல்லாது வேலையில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இது எல்லாம் டிரம்ப்பின் உத்தரவில்லாமல் சாத்தியப்பட்டிருக்க முடியாது. எனவே டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் கூறுகையில், "இரண்டு முக்கியமான விஷயத்திற்காக நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். ஒன்று, எல்சால்வடாருக்கு நாடு கடத்தப்பட்டவர்களுக்காக. இரண்டாவது அமெரிக்காவில் மன்னராட்சி நடைபெறவில்லை என்பதை தெரிவிப்பதற்காக. இங்கு யாரும் ராஜா கிடையாது. அமெரிக்கா மன்னராட்சியிலிருந்து எப்போதோ குடியரசாகிவிட்டது.
நாங்கள் எங்கள் வாரிசுகளுக்கு சுதந்திரத்திற்காக அர்த்தம் என்ன என்பது பற்றியும், அதை எப்படி பாதுகாப்பது? என்பது பற்றியும் சொல்லித்தரவே இந்த போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
டிரம்ப் அதிபராக பதவியேற்றபோது அவருக்கு இருந்த ஆதரவை விட தற்போது ஆதரவு குறைந்திருப்பதாக புள்ளிவிரவங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 1952ம் ஆண்டிலிருந்து 2020 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்களுக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு 60% வரை இருந்திருக்கிறது. ஆனால் டிரம்ப்புக்கு தற்போது அதரவு 45% என இருக்கிறது. துல்லியமாக சொல்ல வேண்டும் எனில் அவர் பதவியேற்கும்போது 47% அவருக்கு சப்போர்ட் இருந்தது. இப்போது 43% ஆக அது குறைந்திருக்கிறது.
அவர் மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைளுக்கு தொடக்கத்தில் 42% ஆதரவு இருந்தது. இப்போது அது 37% ஆக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications