திபெத்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 44 சுற்றுலா பயணிகள் பலி
பீஜிங்: திபெத்தில் மலை பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில், 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்,11 பேர் படுகாயம் அடைந்தனர்.
சீன அரசின் கட்டுப்பாட்டில் திபெத் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இங்கு மலை சுற்றுலா தலமான லகாசாவுக்கு கிழக்கு சீனாவை சேர்ந்த 50 பேர் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.
அவர்கள் பள்ளத்தாக்குப் பகுதியை சுற்றி பார்த்து விட்டு சனிக்கிழமை மாலையில் திரும்பி கொண்டிருந்தனர்.
மலைப் பாதையில் வந்து கொண்டிருந்த போது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற 2 வாகனங்களின் மீது மோதியது. பின்னர், கிடுகிடு பள்ளத்தாக்கில் உருண்டு கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு குழுவினரும் விரைந்து சென்று, கரடுமுரடான பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர விபத்தில், 44 பேர் சம்பவ இடத்திலேயே உயிபிழந்தனர். படுகாயமடைந்த 11பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திபெத்தில் மலை பள்ளத்தாக்கு பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளன. மேலும், பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.