ஒன்னு அமைதி இல்லைனா அழிவு.. இரண்டே வார்த்தையில் முடித்த ட்ரம்ப்! 61வது நாளில் ஈரானில் ஆடிய ஆட்டம்!
நியூயார்க்: ஈரானுக்கு 60 நாட்கள் கெடு கொடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 61வது நாளில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், உலகத்திலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் எனவும், ஒன்று அமைதி இல்லையேல் அழிவு என உறுதிப்பட கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் எதிர்பாராத விதமாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணு தளங்கள் மீது தங்கள் நாட்டின் விமானப்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இருக்கிறார். இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல் தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்," ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம். அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும்" என கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையால் உலக அளவில் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இருக்கும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் போரில் தலையிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் குறித்து அமெரிக்கர்களிடையே உரையாற்றினார் டொனால்ட் டிரம்ப். அப்போது பேசிய அவர்," உலகத்திலேயே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நம்பர் ஒன் நாடு ஈரான். ஈரானின் சில இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி உள்ளோம். சில இலக்குகளை நாங்கள் விட்டு வைத்துள்ளோம். ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிடில் எஞ்சியுள்ள இலக்குகளையும் தகர்ப்போம். அமைதி பாதைக்கு திரும்பவில்லை என்றால் ஈரான் மீதுஅடுத்தடுத்த தாக்குதல்கள் இன்னும் பயங்கரமாக இருக்கும்.
ஈரான் மீதான தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. மூன்று அணு உலைகள் அமைந்துள்ள இடத்தில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கா ராணுவம் நடத்திய சிறப்பான தாக்குதலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானுக்கு இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று அமைதி அல்லது அழிவு" என உறுதிபட கூறியுள்ளார்.
ஏற்கனவே ஈரானுக்கு பல வாய்ப்புகள் கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொள்ளவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஈரானுக்கு 60 நாள் கெடு விதித்து இருந்த நிலையில் தற்போது 61-வது நாளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரோஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications