எஃப்பிஐ இயக்குநரை 'வெளியே’ அனுப்பி விட்டு ரஷ்ய தூதரை 'உள்ளே’ அழைத்த ட்ரம்ப்!
வாஷிங்டன்(யு.எஸ்): எஃப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை டிஸ்மிஸ் செய்த பேனா மை காய்வதற்குள், ரஷ்ய தூதர் செர்கே கிஸ்லாயக் வெள்ளை மாளிக்கைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு பற்றி ஜேம்ஸ் கோமி விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

எதிர்க் கட்சியினர், ட்ரம்பின் இந்த முடிவை கடுமையாக கண்டித்து வருகின்றனர். ரஷ்ய தலையீட்டில் ட்ரம்ப்பின் தேர்தல் குழுவினருக்கும் பங்கு இருக்கிறது. அந்த உண்மையை ஜேம்ஸ் கோமி கண்டுபிடிக்கும் நிலையை எட்டி விட்டார். அதனால் தான் அவர் நீக்கப்பட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.
அதை தானாகவே வழிமொழிவது போல், ரஷ்ய தூதர் செர்கே கிஸ்லாயக்கை வெள்ளை மாளிக்கைக்கு வரவழைத்து, சிரித்துப் பேசி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் ட்ரம்ப்.
தேர்தல் விவகாரத்தில் கிஸ்லாயக்தான் தலைமை உளவாளி, அவர்தான் பல்வேறு உளவாளிகளை தேர்ந்தெடுத்தார் என்று அமெரிக்க புலனாய்வு வட்டத்தில் குற்றச்சாட்டுகள் உண்டு.
அவரை ட்ரம்பின் மருமகன் குஷ்னர், கடந்த ஆண்டு ட்ரம்ப் டவரில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படி ரஷ்ய உளவு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை அதிகாரப் பூர்வமாக வெள்ளை மாளிகைக்கு அழைத்து ட்ர்ம்ப் சந்தித்தது கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதுவும் ஜேம்ஸ் கோமியை டிஸ்மிஸ் செய்த அடுத்த நாளை காலையிலேயே இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் அதிபரை சந்தித்ததால்தான் உடன் செர்கே கிஸ்லாயக்கும் வந்தார் என்று கூறப்படுகிறது. அமைச்சரின் சந்திப்பே செவ்வாய்க்கிழமை மாலைதான் இறுதி செய்யப்பட்டதாம்.
இந்த சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் ஊடகங்கள் அனுமதிக்கப் படவில்லை அதிபருடன் என்ன பேசினார்கள் என்றும் வெளியிடப்படவில்லை. இதெல்லாம், அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு பற்றி மேலும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக, தினம்தோறும் ரஷ்ய விவகாரம் குறித்த புலனாய்வு தகவல்களை தினம்தோறும் ஜேம்ஸ் கோமி கேட்டு தெரிந்து வந்துள்ளார். அதிக ஆர்வத்துடன் அவர் இதில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதையொட்டியே அவரது டிஸ்மிஸ் உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாம். பத்திரிக்கையாளரகளை சந்தித்த,ட்ரம்ப், 'கோமி சரியாக வேலை செய்யவில்லை, அதனால் நீக்க வேண்டியதாயிற்று' என்று கூலாக பதிலளித்துள்ளார்.
அடுத்து யார் 'அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு; பற்றிய விசாரணையை மேற்கொள்ளப் போகிறார். என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
எஃப்பிஐ இயக்குநர் பதவிக்கு ட்ரம்பின் தீவிர விசுவாசியான , நியூஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டி பெயரும் அடிபடுகிறது.ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்த முதல் கவர்னர் மற்றும் குடியரசுக்கட்சித் தலைவர் க்ரிஸ்டி ஆவார்.
க்ரிஸ்டி எஃப்பிஐ இயக்குநராக தேர்ந்தெடுக்கப் பட்டால் ரஷ்ய விவகார முடிவு எப்படி இருக்கும் என்று முன்னதாகவே கணித்து விடலாம்.
-இர தினகர்












Click it and Unblock the Notifications