துருக்கியில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல்: அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தார் அதிபர் ஏர்டோகன்!
அங்காரா: துருக்கியில் கடந்த 5 மாதங்களில் 2வது முறையாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் ஏர்டோகனின் ஆளும் கட்சியான ஏ.கே.பி. அசுர பலத்துடன் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
துருக்கியில் 13 ஆண்டுகாலமாக அதிபர் ரீசெப் தய்யீப் ஏர்டோகன் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஏர்துவான் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் கூட்டணி அரசு அமைக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் அது பலனளிக்காமல் போகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 550 எம்.பி.க்களை கொண்டது துருக்கி நாடாளுமன்றம்.
ஆட்சி அமைக்க மொத்தம் 276 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். துருக்கி தேர்தலில் ஆளும் ஏ.கே.பி.யுடன் சி.எச்.பி., எச்.டி.பி., எம்.எச்.பி. ஆகிய கட்சிகளும் களமிறங்கின. இந்த தேர்தலில் துருக்கியின் பாதுகாப்புதான் பிரதான அம்சமாக இருந்தது. இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது.
இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் நிச்சயம் பெரும்பான்மை கிடைக்காது என்றே தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கும் வகையில் ஆளும் ஏ.கே.பி. கட்சி அசுர பலத்தை பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
மொத்தம் 550 இடங்களில் 316ஐ ஆளும் ஏ.கே.பி. கட்சி கைப்பற்றியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான சி.எச்.பி. 134 இடங்களில் வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications