இஸ்ரேலுக்கு "உளவு!" இருவரை அடித்தே கொன்ற பாலஸ்தீன குழு! "துரோகிகளுக்கு மன்னிப்பே இல்லை" என மிரட்டல்
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு உளவுத் தகவல்களைக் கொடுப்பதாக மேற்குக் கரையில் உள்ள அகதிகள் முகாமில் இரண்டு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் கடந்த 1.5 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடியைக் கொடுத்து வந்தது. காசா பகுதியில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில் தான் இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு போர் நிறுத்தம் ஏற்பட்டது. இப்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது அங்கே மேற்கு கரையில் பரபர சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு உளவாளிகள்: அதாவது மேற்குக் கரையில் உள்ள அகதிகள் முகாமை உளவு பார்த்து இஸ்ரேலுக்குத் தகவல் கொடுப்பதாக இரண்டு பேரை அங்குள்ள பாலஸ்தீனியர்கள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீதும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து இருவரின் உடலும் அங்கே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மின்கம்பம் ஒன்றில் தொங்கவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் ஒரு பக்கம் தொடரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது: கடந்த நவம்பர் 6ஆம் தேதி துல்கரேம் அகதிகள் முகாமில் இரண்டு பேர் இஸ்ரேலுக்கு உளவு தகவைகளைக் கொடுத்து உதவுவதாக அங்குள்ள பாலஸ்தீன குழு குற்றம் சாட்டியது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இருவரும் 31 வயதான ஹம்சா முபாரக் மற்றும் 29 வயதான ஆசம் ஜுப்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் கொல்லப்படும் வீடியோவும் அங்கே இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அங்கே அந்த கூட்டம் அவர்களைச் சரமாரியாகத் தாக்குவதும் ஆபாசமாகத் திட்டுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் தாங்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு உளவுத் தகவல்களை அனுப்பியதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.
மன்னிப்பே இல்லை: அங்குள்ள ரெசிஸ்டன்ஸ் செக்யூரிட்டி என்ற அமைப்பு தான் இந்த இருவரையும் தீர்த்துக்கட்டியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "உளவாளிகளுக்கும் துரோகிக்கும் இங்கே மன்னிப்பே இல்லை என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமே இந்த இருவர் கொடுத்த உளவுத் தகவல்கள் தான். இதற்குத் தண்டனையாக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது" என்றார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அல்லது இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு உதவியதாக இரண்டு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஹமாஸ் போரைப் பொறுத்தவரை இப்போது அதன் போர் நிறுத்தம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை ஹமாஸ் தரப்பில் இருந்து பல பேட்ஜ்களாக பிணையக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இஸ்ரேலும் தங்கள் சிறையில் இருந்த பல பாலஸ்தீன கைதிகளை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் நிறுத்தம் நாளையுடன் முடியும் நிலையில், அது மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications