மாதேசிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாகிச்சூடு... 2 பேர் பலி, பலர் படுகாயம்
காத்மாண்டு: நேபாளத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாதேசிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய எல்லை ஓரம் வசித்து வரும் மாதேசிகள் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், சப்தாரி மாவட்டத்தில் உள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் ஐக்கிய ஜனநாயக மாதேசி முன்னணி அமைப்பினர் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலந்து செல்லுமாறு பலமுறை எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகள் மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதையடுத்து போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த வன்முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர் மேலும் ஏராளமான ஆர்ப்பாட்டகாரர்களும், 25-க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் 2,500-க்கும் அதிகமானோர் ஈடுபட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டகால் கூறியுள்ளார். இந்த சம்பவத்தினை அடுத்து, இந்தியாவிலிருந்து நேபாள நாட்டிற்கு செல்லும் சரக்குகள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவை தடைப்பட்டு உள்ளது. நேபாளம் முழுவதும் மாதேசி குழுக்களின் போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications