"எங்கள் நாட்டிற்காக போராடுகிறோம்.." நேரடியாக களத்தில் இறங்கிய அதிபர் ஜெலன்ஸ்கி! நெகிழ்ச்சி வீடியோ
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3ஆவது நாளாகத் தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், வியாழக்கிழமை முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அதிபர் புதின் ரஷ்ய உத்தரவிட்டார்.
அதன்படி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது. முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் பீரங்கி உள்ளிட்டவை பயன்படுத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர்
இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்திருந்தது. 2 நாட்களைக் கடந்து போர் தொடரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அண்டை நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் ராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை அளித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
|
புதிய விடியோ
இந்தச் சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்றிரவு கீவ் நகரின் மத்திய பகுதியில் இருந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முக்கிய ராணுவ அதிகாரிகள் உடன் இணைந்து ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராகத் தலைநகரைப் பாதுகாத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் அதிபர் ஜெலன்ஸ்கி, "நாங்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவமும் இங்கே தான் உள்ளது. மக்களும் இங்கே இருக்கிறார்கள். எங்கள் நாட்டையும் எங்கள் சுதந்திரத்தையும் பாதுகாக்க நாங்கள் அனைவரும் இங்குப் போராடுகிறோம். போர் எத்தனை காலம் தொடர்ந்தாலும் இது மாறாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்கள் உடை
சுமார் 33 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் அதிபர் ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களைப் போன்ற உடை அணிந்து உள்ளார். தலைநகர் கீவ் நகரின் மையப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அவரது பிரதமர், தலைமை பாதுகாப்பு அதிகாரி உட்பட அனைத்து உக்ரைன் நாட்டின் அனைத்து மூத்த அதிகாரிகளும் உள்ளனர். உக்ரைன் சரணடைய வேண்டும் என ரஷ்யக் கூறி வரும் நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் வீதிகளில் இறங்கி வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜெலன்ஸ்கி!

கீவ் நகரில் போர்
ஏற்கனவே, தலைநகர் கீவ் நகருக்கு அருகே ரஷ்யப் படைகள் வந்துவிட்டன. உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றினால் ஒட்டுமொத்த நாட்டையும் தன் வசப்படுத்தியதைப் போல என ரஷ்யா நம்புகிறது. இதனால் உக்ரைன் தலைநகரை நோக்கி வேகமாக ரஷ்யா முன்னேறி வந்தது. அதன்படி கடந்த நேற்றைய தினம் தலைநகர் கீவ் நகரின் வடக்கு பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் நுழைய முயல்வதாகவும் அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் போலி பிரசாரம்
மறுபுறம் உக்ரைன் நாட்டிற்கு எதிரான பிரசார வீடியோக்களை ரஷ்யா வெளியிடத் தொடங்கி உள்ளது. சமீபத்தில் மாஸ்கோவில் இருந்து நாட்டு மக்களிடையே உரையாடிய புதின், உக்ரைனின் நாட்டின் ஜெலன்ஸ்கி அரசைப் பயங்கரவாதிகளின் அரசு என விமர்சித்தார். மேலும், ஜெலன்ஸ்கி மற்றும் அவரது சகாக்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் நாஜிக்களுக்கு இணையானவர்கள் என்றும் சாடினார். மேலும், உக்ரைன் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உயிரிழப்புகள்
ரஷ்யா மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டு இருந்தாலும் கூட உக்ரைன் மிக துணிச்சலுடன் போராடி வருகிறது. இதனிடையே இதுவரை 1000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேபோல பொதுமக்களில் 25 கொல்லப்பட்டதாகவும், 102 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை விட உண்மையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. அதேநேரம் ரஷ்யா தரப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications