"நேருக்கு நேர்!" விரைவில் நடக்கப் போகும் புதின்- ஜெலன்ஸ்கி மீட்டிங்! ஏன் மிக முக்கியம் தெரியுமா
கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுப்பதாக புதின் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்தப் போர் இப்போது 5ஆவது வாரமாகத் தொடர்கிறது. இந்த போர் காரணமாக இரு நாட்டு ராணுவங்களைத் தாண்டி பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் தொடங்கியது முதலே மறுபுறம் இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் இன்று இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படாத போதிலும், இந்த துருக்கி பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.

நேட்டோ
உக்ரைன் நாட்டிற்குத் தகுந்த பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கினால், அதற்கு ஈடாக நடுநிலை நிலையை ஏற்க உக்ரைன் சம்மதம் தெரித்துள்ளது. அதாவது உக்ரைன் நேட்டோ அமைப்பிலும் சேராது. மேலும் உக்ரைனில் நேட்டோ அமைப்பின் ராணுவ தளங்களை அமைக்கவும் அனுமதி தராது என்று உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல உக்ரைன் நாட்டில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்யா ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேற்குலக நாடுகள்
இந்தப் போர் தொடங்க காரணங்களில் ஒன்று வடக்கு அட்லாண்டிக் ட்ரிட்டி அமைப்பு (நேட்டோ) ஆகும். உக்ரைன் போரைத் தொடங்கும் முன்பு மேற்குலக நாடுகளுக்கும் அதிபர் புதின் சில நிபந்தனைகளை விதித்திருந்தார். குறிப்பாக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தனது வீரர்களை நேட்டோ அமைப்பு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்டவை முக்கியமானவை. இதில் நேட்டோ விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது

புதின் மற்றும் ஜெலன்ஸ்கி சந்திப்பு
இதன் காரணமாக வரும் நாட்களில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு கூட வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் சந்திக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போரை முடிவுக்குக் கொண்டு வர போதுமான அளவுக்குப் பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மிக விரைவில் சந்திப்பு
குறிப்பாக இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்திக்கும் அளவுக்குப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர் டேவிட் அராகாமியா தெரிவித்தார். இதன் மூலம் மிக விரைவில் புதின் மற்றும் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவும் கூட இந்த துருக்கி பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருந்ததாகவே தெரிவித்துள்ளது.
Recommended Video

சர்வதேச ஒப்பந்தம்
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களுக்கு மனிதாபிமான உதவிகள், உக்ரைன் நடுநிலை என பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டதாக ரஷ்யா பேச்சுவார்த்தை குழுவினர் குறிப்பிட்டனர். இதற்கிடையில், அண்டை நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலான ஒரு சர்வதேச ஒப்பந்தத்திற்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications