குடிநீர் கூட இல்லாமல் தவிக்கும் கர்ப்பிணிகள்! இப்போ இப்படியொரு உத்தரவா? இஸ்ரேலுக்கு ஐநா குட்டு
காசா: இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் 50,000 கர்ப்பிணிகள் குடிநீர், உணவு இல்லாமல் தவித்து வருகிறதாக ஐநா கூறியுள்ளது. ஏற்கெனவே 4.23 லட்சம் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை இஸ்ரேல் திரும்பப்பெற வேண்டும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்த யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனத்தை தற்போது ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியுள்ளனர். கடந்த 1947ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இது அரங்கேறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடிய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் மீது இஸ்ரேல் மேற்கு நாடுகளுடன் கைகோர்த்து தாக்குதலை நடத்தியிருந்தது. எனவே பொறுத்து பொறுத்து பார்த்த இந்த குழுக்கள் ஆயுதங்களை கையில் ஏந்த தொடங்கினர். இது 1980களில் அதாவது இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடங்கி 40 ஆண்டுகள் கழித்து நடந்திருக்கிறது.

ஆனால் இஸ்ரேலும் அதனுடன் சேர்ந்து மேற்கு நாடுகளும் இந்த விடுதலை அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளன. இதன் பின்னர் இந்த அமைப்புகள் மீதும் பாலஸ்தீனத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த தாக்குதலை எதிர்த்து ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அடிக்கடி எதிர் தாக்குதலை தொடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 7ம் தேதியன்று எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. ஒரே நேரத்தில் 5000 ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேலின் பாதுகாப்பு அம்சமான 'அயர்ன் டோம்' ஓவர் லோடாகி சில ஏவுகணைகளை தவறவிட்டிருக்கிறது. இது இஸ்ரேலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர், காசாவின் இஸ்ரேலிய ராணுவ முகாம்கள் மீது தாக்குதலை தொடுத்திருக்கின்றனர். இவையெல்லவற்றையும் வெறும் 1,200 ஹமாஸ் வீரர்கள்தான் செய்ததாக அந்த அமைப்பினர் தலைவர் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் மிகவும் பாதுகாப்பான நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை உக்கிரமாக தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் 7வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் தற்போது வரை 447 குழந்தைகள், 250 பெண்கள் என மொத்தம் 1537 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 6,268 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேபோல ஹமாஸ் படையினர் வசம் இருக்கும் இஸ்ரேலிய பிணை கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவுக்கு செல்லும் குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என அனைத்தும் துண்டிக்கப்படும் என இஸ்ரேல் அமைச்சர் கூறியிருந்தார். அதேபோல தற்போது அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. காசா எனும் துண்டு நிலத்தை முழுமையாக காலி செய்வோம் என்று இஸ்ரேல் முழக்கமிட்டு வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்குள் காசாவில் இருக்கும் அனைவரும் வெறியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. "குறுகிய நேரத்தில் 11 லட்சம் மக்கள் வெளியேற கூறியிருப்பது மிகப்பெரிய அழிவுகளையே கொண்டு வந்து சேர்க்கும். உடனடியாக இந்த அறிவிப்பை திரும்ப பெறுங்கள்" என ஐநா மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. ஏற்கெனவே இதுவரை காசாவின் 4.23 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் குடிநீர், உணவு இல்லாமல் காசாவில் 50,000 கர்ப்பிணிகள் சிக்கியுள்ளனர் என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது. தற்போது இஸ்ரேலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய ரூ.2,400 கோடிக்கும் மேல் செலவாகும் என ஐநா கணித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications