14 மாத தடை நீங்கியது... முன்னாள் அதிபர் முஷரப் வெளிநாடு செல்ல பாக். கோர்ட் அனுமதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு விதிக்கப் பட்டிருந்த தடையை அந்நாட்டு கோர்ட் நீக்கியுள்ளது.
தேசத்துரோக குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த முஷரப், கடந்தாண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்காக நாடு திரும்பினார்.
அவர் மீது நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் காரணமாக நாடு திரும்பிய முஷரப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், வெளிநாடுகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.
ஆனால், இந்த தடையை நீக்கக்கோரி சிந்து மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் முஷரப். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ஐக்கிய அரபு எமிரேட்சில் இருக்கும் உடல்நலம் குன்றிய தன் தாயாரைப் பார்ப்பதற்காக தன் மீதான பயணத் தடையை நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், முஷரப் மீதான பயணத் தடையை நீக்கி நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், வெளிநாடுகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் இருந்து முஷரப்பின் பெயரை நீக்கவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்மூலம் சுமார் 14 மாத இடைவெளிக்குப் பின், முஷரப் மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகியுள்ளது.
எனினும், அடுத்துவரும் 15 நாட்களில் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றால் முஷரப் நாட்டை விட்டு வெளியேறுவது மீண்டும் கேள்விக்குறியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.